டப்ளின்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதே சுகமான தலைவலி போன்றது என கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
அண்மை காலங்களில் இந்திய டி20 அணியை ஹர்திக் பாண்டியா வழி நடத்தி வருகிறார். ஒவ்வொரு முறையும் களத்தில் வென்றாலும், தோற்றாலும் உள்ளுணர்வின் படியே கேப்டன்சியை மேற்கொள்கிறேன் என்று கூறி வந்துள்ளார். கிரிக்கெட்டில் உள்ளுணர்வு என்பது நேரத்திற்கு தகுந்தாற் போல் முடிவை எடுப்பதும், சூழலுக்கு ஏற்ற பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்துவதும் தான்.

அதற்கு பிட்சை கணிப்பது, வீரர்களின் திறமை, எதிரணியின் திட்டம் பற்றிய புரிதல் உள்ளிட்டவை பற்றிய போதுமான யோசனை இருக்க வேண்டும். ஆனால் ராகுல் டிராவிட் சொல்வதை கேட்கும் ஹர்திக் பாண்டியா, உள்ளுணர்வு பற்றிய பேசுவது தான் ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அயர்லாந்து டி20 தொடரின் 2 போட்டிகளிலேயே ஜஸ்பிரித் பும்ரா கேப்டன்சியில் மிரட்டி வருகிறார்.
பிட்சை கணிப்பது, வீரர்களின் தேர்வு, ஃபீல்ட் செட், பந்துவீச்சாளர்களை மாற்றுவது என்று எளிமையாக கிரிக்கெட்டின் அடிப்படை சரியாக செய்து கேப்டன்சியை எளிமையாக்கி கொள்கிறார். இந்த நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான 2 டி20 போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம், 2-0 என்ற கணக்கில் இந்தியா டி20 தொடரை கைப்பற்றியது.
இந்த வெற்றி குறித்து ஜஸ்பிரித் பும்ரா பேசுகையில், வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய நாள் பிட்ச் கொஞ்சம் உலர்ந்திருந்தது. அதனால் இரண்டாம் பாதியில் பிட்ச் மித வேகத்தில் இருக்கும் என்று கருதினோம். அதன் காரணமாகவே முதலில் பேட்டிங் செய்யும் திட்டத்துடன் களமிறங்கினோம். அது எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்திய அணியின் அனைத்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது.
நிச்சயம் பிளேயிங் லெவனை தேர்வு செய்வது பெரும் தலைவலி தான். ஆனால் அதனை சுகமான தலைவலியாகவே பார்க்கிறேன். ஒவ்வொரு வீரரும் ஆர்வத்துடனும், மன உறுதியுடன் இருக்கிறார்கள். ஒவ்வொரு வீரருக்கும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதேபோல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மனதில் ஏற்றிக் கொண்டால், கிரிக்கெட்டுக்கு சரி வராது. எதிர்பார்ப்புகளை ஓரம்வைத்து சுதிந்திரமாக களத்தில் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.