மும்பை: ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி விளையாடிய ஜிம்பாப்வே டி20 தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்ட போதும், பும்ராவுக்கு ஓய்வு வழங்குவதில் தேர்வுக் குழுவினர் தீவிரமாக இருந்தனர்.
பும்ராவும் தனது மகன் மற்றும் மனைவி சஞ்சனா கணேசனுடன் நேரம் செலவிட்டு வருகிறார். இதனால் பும்ராவின் கம்பேக் எப்போது இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், செப்டம்பர் 27ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும் தொடங்கவுள்ளது.

சென்னை மற்றும் கான்பூர் மைதானங்களில் நடக்கவுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் பும்ரா இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், மாறாக தேர்வுக் குழு அவருக்கு ஓய்வை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. வங்கதேச டெஸ்ட் தொடருக்கு அல்லாமல் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பும்ராவை தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏனென்றால் நடப்பாண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியில் இருந்து இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை தயார் செய்ய பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அவரது இடத்தில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது. இடதுகை வேகப்பந்துவீச்சாளருக்கான தேடலில் இந்திய டி20 அணியின் நட்சத்திர வீரர் அர்ஷ்தீப் சிங் முன்னணியில் இருக்கிறார்.
இதன்பின் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆடிய கலீல் அஹ்மத் மற்றும் ஆர்சிபி அணியின் இளம் வீரர் யாஷ் தயாள் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். இவர்கள் மூவருமே துலீப் டிராபி தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிச்சயம் அர்ஷ்தீப் சிங் மற்றும் யாஷ் தயாள் இருவரும் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.