மும்பை: நடப்பாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா முதலிடத்தில் இருக்கிறார். 20 இன்னிங்ஸ்களில் மட்டும் விளையாடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்துள்ள பும்ராவுக்கு, அடுத்த டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரிட் பும்ராவின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, 2வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலமாக 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பும்ரா 164 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 6வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பும்ரா பெற்றார். அதேபோல் 70 இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய கபில் தேவின் சாதனையையும் பும்ரா முறியடித்தார். இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக மற்றொரு சாதனையையும் பும்ரா படைத்துள்ளார்.
நடப்பாண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று 3 வடிவங்களிலும் சேர்த்து 20 இன்னிங்ஸ்களில் விளையாடிய பும்ரா மொத்தமாக 47 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த பட்டியலில் இலங்கை அணியின் ஸ்பின்னரான ஹசரங்கா 20 இன்னிங்ஸ்களில் விளையாடி 43 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் இன்னும் 4 நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஸ்பின்னரான குல்தீப் யாதவின் சொந்த மைதானமாகும். இதனால் இந்தப் போட்டியில் இந்திய அணி 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் தான் களமிறங்கும் என்று பார்க்கப்படுகிறது.
இதனால் 2வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் அல்லது யாஷ் தயாளுடன் களமிறங்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. பும்ராவின் வேலைப் பளுவை குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.