5வது டெஸ்ட் போட்டி
2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை இலக்காக நிர்ணயித்தும், பவுலிங்கில் சொதப்பியது. கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 109 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் அதன்பின்னர் வந்த ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் 287 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்களை கடைசி வரை இந்திய பவுலர்களால் பிரிக்கவே முடியவில்லை.
இங்கி, வெற்றி
இதனால் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட் 142 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 114 ரன்களையும் சேர்த்தனர். மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 2 என சமன் செய்தது.
கேப்டன் பும்ரா விளக்கம்
இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் பும்ரா விளக்கம் அளித்துள்ளார். அதில், டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகே, இறுதி வரை முடிவை கணிக்க முடியாது. முதல் 3 நாட்கள் சாதகமாக இருந்தாலும் கடைசி 2 நாட்களில் சறுக்கிவிட்டோம். 2வது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சற்று சொதப்பியதே தோல்விக்கு காரணமாகும். அந்த இடத்தில் தான் இங்கிலாந்து அணி கம்பேக் கொடுத்தது.
இந்தியாவும் வென்றிருக்கும்
கடந்தாண்டு நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிடாமல் இருந்திருந்தால், நாங்கள் இந்நேரம் வெற்றி பெற்றிருக்கலாம். எல்லாம் தலைகீழாக மாறுகிறது. இங்கிலாந்து அணியும் சிறப்பாக விளையாடியுள்ளது. 2-2 என்ற முடிவு நியாயமான ஒன்றாக தான் எங்களுக்கு உள்ளது.
டிராவிட்-க்கு பெருமை
ரிஷப் பண்ட் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துகிறார். அவரும் ஜடேஜாவும் இந்திய அணியின் கம்பேக்கிற்கு பெரும் உதவியாக இருந்தனர். நாங்கள் இக்கட்டான சூழலில் இருக்கும் போதும், எங்களுக்காக எப்போதுமே டிராவிட் பின்னால் நின்று உதவிக்கொண்டே தான் இருக்கிறார். எங்களை சிறப்பாக வழிநடத்துகிறார் என பும்ரா கூறினார்.