மும்பை : பார்டர் கவாஸ்கர் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய இலக்கு சாம்பியன்ஸ் கோப்பை தொடர்தான். 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் இந்த தொடரில் இந்தியா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து,வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கிறது.
2013ஆம் ஆண்டு கடைசியாக இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையில் வென்றது. அதன் பிறகு 50 ஓவர் தொடரில் மிகப்பெரிய கோப்பையை இந்தியா வெல்லவில்லை. கடைசியாக இரண்டு முறை 2017 மற்றும் 2023 ஆம் ஆண்டு ஐசிசி 50 ஓவர் தொடர்களில் இறுதிப்போட்டி வரை இந்திய அணி, ரோகித் சர்மா,விராட் கோலி ஆகியோருக்கு மிகவும் முக்கிய தொடராக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் ஆஸ்திரேலியா மண்ணில் ஏற்பட்ட அவமானத்தை துடைக்க வேண்டும் என்றால் இந்த கோப்பையை இந்தியா வென்றாக வேண்டும். ஆனால் தற்போது அதற்கு மிகப்பெரிய பின்னடைவு ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்டில் காயம் காரணமாக பாதியில் விலகினார்.
இந்த தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா தனி ஆளாக தொடர்ந்து ஓவர்களை வீசி வந்தார். இது அவருடைய உடல் தகுதியை பாதிக்க செய்திருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பும்ரா சேர்க்கப்பட்டாலும் அவர் லீக் சுற்றில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி வரும் பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்திலும், பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்திலும், மார்ச் இரண்டாம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்திலும் இந்தியா விளையாட உள்ளது. இந்த மூன்றிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு எளிதாக செல்லும். அதிலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 50 ஓவர் போட்டியில் இருக்கிறது.
இந்த ஆட்டத்தில் பும்ரா பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது. பும்ராவுக்கு 8 வாரம் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், அவர் முழு உடல் தகுதி எட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பும்ரா பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு வேலை விளையாடவில்லை என்றால் அது மிகப்பெரிய பின்னடைவை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.