மும்பை: 2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இந்த தொடர் முழுவதும் அபாரமாக பந்துவீசிய அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இந்நிலையில், பும்ராவின் பந்துவீச்சு குறித்து பாகிஸ்தான் அணியின் தேர்வாளரும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான ஆக்கிப் ஜாவேத் விசித்திரமான கருத்தை தெரிவித்துள்ளார். பும்ராவை 9 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ள பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக்குடன் ஒப்பிட்டு அவர் பேசியுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக், தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையால் சமீபத்திய உலகக்கோப்பையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர். அவர் உலகக்கோப்பை தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 10 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆக்கிப் ஜாவேத், "பும்ரா ஒரு சாதாரண பந்துவீச்சாளர் கிடையாது. அவரது பந்துவீச்சு முறை மிகவும் வித்தியாசமானது. வேகப்பந்து வீச்சாளர்களின் உஸ்மான் தாரிக் என்று தான் பும்ராவை நான் எப்போதும் சொல்வேன். அவர் மிக வேகமாக, மிகவும் தனித்துவமான முறையில் பந்துவீசுவதால் எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் அவருக்கு எதிராக எளிதாக ரன் குவிக்க முடியாது" என்று தெரிவித்தார்.

இப்படி சம்பந்தமே இல்லாமல் ஒப்பிட்டாலும், பும்ராவை ஜாவேத் வெகுவாக பாராட்டவும் செய்தார். "இந்த முழு உலகக்கோப்பையிலும் பும்ராவைத் தவிர வேறு எந்த பந்துவீச்சாளரையாவது பார்த்து வாசிம் அக்ரம் அல்லது வக்கார் யூனிஸ் போன்ற ஜாம்பவான்களின் சாயல் இருப்பதாக உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக வேறு எந்த அணியிலும் அப்படி ஒருவரை உங்களால் பார்க்க முடியாது" என்று ஆக்கிப் ஜாவேத் புகழ்ந்து தள்ளினார்.

முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் ஜாகீர் அப்பாஸும் பும்ராவை வெகுவாக புகழ்ந்திருந்தார். "வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரின் அபாரமான கலவை தான் ஜஸ்பிரித் பும்ரா. இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் வீசும் யார்க்கர், வேகம் மற்றும் பந்தை ஸ்விங் செய்யும் விதம் அசாதாரணமானது. தனது அபாரமான செயல்பாட்டால் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல அவர் தனி ஆளாக காரணமாக இருந்துள்ளார்" என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
