கொழும்பு: குழந்தை பிறந்த 4 நாட்களில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா மீண்டும் இந்திய அணியுடன் பயிற்சியில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா. 10 மாதங்களுக்கு பின் மீண்டும் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு திரும்பினார். சுமார் ஓராண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தாலும் வீசிய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை தெறிக்கவிட்டார். இதன் மூலம் ரசிகர்கள் பும்ராவின் சரியான கம்பேக் இது என்று கொண்டாடினர்.

இதன் பின் ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். அப்போது பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், பேட்டிங்கில் 16 ரன்கள் சேர்த்தார். இதன் பின் திடீரென பும்ரா மும்பை திரும்புவதாக தகவல் வெளியானது. இதனால் பும்ரா மீண்டும் காயமடைந்தாரா என்று ரசிகர்கள் குழம்பினர்.
இந்த நிலையில் பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் பிறந்ததாக தெரிய வந்தது. இதனை பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதியினர் தங்களுடன் கைகளுடன் குழந்தையின் கைகளையும் இணைத்து புகைப்படம் எடுத்து ட்விட்டர் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதையடுத்து பலரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே பும்ராவின் மீது விமர்சனங்களும் எழுந்தன.
ஆசியக் கோப்பை தொடரை விடவும் குழந்தை பிறப்புக்கு உடனிருப்பது முக்கியமா என்று சிலர் பும்ராவின் சொந்த வாழ்க்கையில் புகுந்து கருத்து தெரிவித்து தெரிவித்தனர். ஆனால் பும்ராவை அதைப்பற்றி கவலைப்படவே இல்லை. இதன் காரணமாக நேபாள் அணியுடனான போட்டியை மட்டும் பும்ரா தவறவிட்டார்.
இந்த நிலையில் இந்திய அணி நாளை மறுநாள் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் களமிறங்க உள்ளது. இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் குழந்தை பிறந்த 4 நாட்களில் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளார் பும்ரா. கொழும்புவில் பயிற்சி பெற்று வரும் இந்திய வீரர்களுடன், பும்ராவும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.