டுபிளின் : இந்திய டி20 கிரிக்கெட் அணியின் 11 வது கேப்டன் மற்றும் கேப்டனான முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றிருந்தார். மேலும் காயத்திலிருந்து திரும்பிய பும்ரா ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக முதல் ஓவரிலே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்த நிலையில் பும்ரா கேப்டனாக முதல் போட்டியில் அசத்தி இருக்கிறார். இதுவரை இந்தியாவுக்கு டி20 கிரிக்கெட்டில் 11 கேப்டன்கள்செயல்பட்டிருக்கிறார்கள்.

இதில் சேவாக் இந்திய டி20 அணியின் முதல் கேப்டனாக செயல்பட்டார். இதில் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் வெற்றியை ருசித்தார். இதேபோன்று தோனி, ரெய்னா, ரஹானே, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் ஆகியோர் கேப்டனாக தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்று அசத்தி இருந்தார்கள். இந்திய டி20 அணி வரலாற்றிலேயே விராட் கோலியும், ரிஷப் பண்டும் தான் கேப்டனாக தங்களது முதல் டி20 போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.
தற்போது 11 வது கேப்டனாக சேர்ந்த பும்ரா முதல் போட்டியில் வெற்றியை பெற்று தோனி ,ரோஹித் ஆகியோர் வரிசையில் இணைந்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்து ஆட்டநாயகன் விருதை வென்ற நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றிருக்கிறார். இதற்கு முன் ரோகித் சர்மா ஐந்து முறையும், விராட் கோலி மூன்று முறையும், சுரேஷ் ரெய்னா ஒரு முறையும் கேப்டனாக ஆட்டநாயகன் விருதை வென்ற நிலையில் தற்போது பும்ரா இந்த பட்டியலில் இணைந்திருக்கிறார்.
இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா கேப்டனாக அறிமுகமான போது ஐந்து விக்கெட் மற்றும் பேட்டிங்கில் ஒரே ஓவரில் 35 ரன்கள் என அடித்து நொறுக்கி இருந்த நிலையில் தற்போது டி20 கிரிக்கெட்டிலும் அதேபோல் செயல்பட்டு இருக்கிறார். இதன் மூலம் பும்ரா கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார் என தெரிகிறது. மேலும் பும்ரா பேட்டி கொடுக்கும்போது கூட, எதைப் பேச வேண்டுமோ அதை மட்டுமே பேசினார். மேலும் மிகவும் இயல்பாக நடந்து கொண்டார்.
தன்னுடைய செயல்பாட்டின் மூலம் மற்றவர்களையும் பும்ரா ஊக்கப்படுத்தினார். ஆனால் ஹர்திக் பாண்டியா நான் வித்தியாசமாக தான் பேசுவேன். வித்தியாசமாகத்தான் செய்வேன் என அவருக்கு இருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார். இதனால் ஹர்திக் பாண்டியாவை பும்ரா ஓவர் டெக் செய்து t20 அணியின் கேப்டனாக கூட ஆகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.