மும்பை: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் துபாயில் நடைபெற இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் இந்த தொடரில் மோதுகின்றன.
ஆசிய கோப்பையை இந்திய அணி தான் தற்போது கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெறுவதால், இம்முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி டி20 போட்டியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தருணத்தில் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு தற்போது பெரும் பின்னடைவு ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பும்ரா ஏற்கனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெறும் மூன்று போட்டிகள் தான் விளையாடுகிறார். ஆனால் அவருக்கு உடல் தகுதி பிரச்சனை இருப்பதால், இனி பும்ரா டி20 ஒருநாள் போட்டிகளில் பெரும் அளவு பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் எதிராக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது.
இந்தப் போட்டிகளில் பும்ரா பங்கேற்க வேண்டும் என்பதற்காக, அவர் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்தியா எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் இதுவரை பங்கேற்கவில்லை. ஏற்கனவே நடைபெற இருந்த வங்கதேச தொடரும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் ஆகஸ்ட் மாதம் இந்தியா எந்த போட்டிகளிலும் பங்கேற்காத நிலையில் செப்டம்பர் மாதமும் ஓய்வு தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆசிய கோப்பை போட்டிகளில் பும்ராவை சூப்பர் 4, அல்லது அரை இறுதி, இறுதிப் போட்டிகளிலாவது சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். பும்ராவை கோழி குஞ்சு போல் பாதுகாப்பது தவறும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.