பவுலர்கள் ஏமாற்றம்
சவுத்தாம்டன் களத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினாலும், பந்துவீச்சு மீது மிகுந்த நம்பிக்கையை ரசிகர்கள் வைத்திருந்தனர். ஏனென்றால் அஸ்வின், ஜடேஜா, பும்ரா, ஷமி, இஷாந்த் என நட்சத்திர படை இருந்தது. ஆனால் பந்துவீச்சு ஏமாற்றமே அளித்தது. குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான களத்தில் ஒரு விக்கெட் கூட எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பும்ராவின் மோசமான ஆட்டம்
முதல் இன்னிங்ஸில் 26 ஓவர்களை வீசிய பும்ரா, தவறான லெந்த்களால் விமர்சனத்திற்கு ஆளானார். துரதிஷ்டவசமாக அவரின் பந்துவீச்சில் புஜாரா ஒரு கேட்சையும் தவறவிட்டதால் முதல் இன்னிங்ஸில் விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. 2வது இன்னிங்ஸில் தவறை சரி செய்துகொண்ட போதும் அவர் ஒரு விக்கெட்டை கூட சாய்க்கவில்லை. இதனால் அவரின் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இன்ஸ்டா பதிவு
இந்நிலையில் அவர் போட்டுள்ள இன்ஸ்டா பதிவு ஒன்று ரசிகர்களை இன்னும் கடுப்பாக்கி உள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி அன்று தான் தொடங்கும் என்பதால், இந்திய வீரர்கள் தற்போது குடும்பத்தினருடன் ஜாலியாக இங்கிலாந்தை வலம் வருகின்றனர். அந்தவகையில் புதுமண ஜோடியான பும்ரா - சஞ்சனா கணேசன் ஆகியோரும் தங்களது முதல் சுற்றுலாவை கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து தனது மனைவியுடன் ஜோடியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள பும்ரா சிரித்தவாறு கேப்சனும் போட்டுள்ளார்.
விமர்சனங்கள்
இதனை கண்ட ரசிகர்கள், "முக்கியமான போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாகிவிட்டு, மனைவியுடன் எப்படி ஜாலியாக ஊர்சுற்ற முடிகிறது, பொறுப்புடன் நடந்துக்கொள்ளுங்கள், கொஞ்சம் கூட கவலை இல்லையா?"என பல விமர்சனங்களை கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.
சொதப்பல்கள்
இறுதிப்போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா சொதப்புவது இது முதல் முறை அல்ல. கடந்த 2019ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் ஃபாகர் சமானுக்கு பும்ரா வீசிய 'நோ பால்' தான் பாகிஸ்தானின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதுமட்டுமல்லாமல் பல்வேறு இக்கட்டான சூழல்களில் பும்ரா நோ பால்களை வீசி விமர்சனத்திற்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.