மேற்கிந்திய தொடர்களில் வெற்றி
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சர்வதேச டி20 மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டி தொடர்களில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி இந்திய அணி இரண்டு தொடர்களையும் 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றிக் கண்டு 2019ஐ இனிதாக முடித்து வைத்துள்ளது.
ஜனவரி 5, 14 தேதிகளில் துவக்கம்
இந்நிலையில் ஜனவரி 5 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச டி20 மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி மோதவுள்ளது.
இந்திய அணியினர் அறிவிப்பு
இந்த இரு தொடர்களில் பங்குபெறும் இந்திய வீரர்களை தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேசிய தேர்வாளர்கள் டெல்லியில் நேற்று அறிவித்துள்ளனர்.
வெற்றிக்கு தயாராகும் இந்தியா
இந்த ஆண்டு இந்திய அணியினருக்கு மிக சிறப்பான ஆண்டாக இருந்தது. இந்த வெற்றி வரலாற்றை தொடர இந்திய அணியில் சிலபல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான போட்டிகள் காரணம்
ஜனவரி 5ம் தேதி துவங்கவுள்ள இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் 3 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொடரில் இருந்து ரோகித் ஷர்மா மற்றும் முகமது ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அவர்கள் தொடர்ச்சியான போட்டிகளில் பங்கேற்றதை அடுத்து அவர்களுக்கு இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஷிகர் தவானும் சேர்ப்பு
காயம் காரணமாக கடந்த 4 மாதங்களாக அணியில் இடம்பெறாத ஜஸ்பிரீத் பும்ரா இந்த தொடர்களில் மீண்டும் இணைந்துள்ளார். இதேபோல ஷிகர் தவானும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
எம்எஸ்கே பிரசாத் அறிவிப்பு
இதனிடையே, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தன்னுடைய திறமைகளை மெருகேற்ற வேண்டிய அவசியம் உள்ளதால் அவருக்கு சிறப்பு பயிற்சியாளர் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்றும் பிரசாத் தெரிவித்துள்ளார்.