சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு தேவை என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து 578 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜோ ரூட் 377 பந்துகளில் 218 ரன்கள் குவித்தார். சிப்லே 87 ரன்களும், ஸ்டோக்ஸ் 82 ரன்களும் சேர்த்தனர்.

தொடக்கத்தில் இரு விக்கெட்டுகள் விழுந்தாலும், ரூட் களமிறங்கிய பிறகு, இந்திய பவுலர்களால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. பும்ரா, அஷ்வின் ஆகிய முன்னணி பவுலர்கள் கூட திணறித் தான் போனார்கள்.
பிட்ச் ஃபிளாட்டாக உள்ளது. அதுதான் இங்கிலாந்து இப்படி அடிக்க காரணம். ஃபிளாட்டாக இருந்தால், பந்து டர்ன் ஆகாது. ஸ்பின்னர்கள் ரொம்பவே சிரமப்படுவார்கள்.
இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பேட்டியில், "ஆஸ்திரேலிய தொடரில் காயத்தால் வெளியேறிய பும்ரா, இப்போது 100 சதவிகிதம் உடல்தகுதியுடன் உள்ளார் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், பும்ரா 2வது டெஸ்ட் போட்டிக்கு நிச்சயம் தேர்வு செய்யப்படக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்.
அவரை பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்கு பத்திரப்படுத்த வேண்டும். இத்தொடரின் 'X-Factor' பும்ரா. சூழலுக்கு ஏற்ப நீங்கள் அவரை பயன்படுத்த வேண்டும். காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் பும்ரா நீண்ட நேரத்திற்கு தொடர்ந்து பந்து வீசக் கூடாது.
ஏனெனில், அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுவிட்டால் அது பல சிக்கல்களை ஏற்படுத்திவிடும். பிறகு, தலைவலி இந்தியாவுக்கு தான்" என்று தெரிவித்துள்ளார்.