சிட்னி : நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்களை கைப்பற்றினார். இதன் மூலம் வெளிநாட்டில் நடைபெறும் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையும் கிடைத்தது.
பும்ராவின் இந்த சாதனையை இந்திய ரசிகர்களை போல் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், நான் பும்ராவை தரம் பிரிக்கவே முடியவில்லை.

ஏனென்றால் நாம் எந்த நம்பர்களை பயன்படுத்தினாலும், அது உலக கிரிக்கெட்டில் பும்ராவின் மகிமையை வெளிக் கொண்டு வராது. கிரிக்கெட்டின் பிதாமகன் பிராட்மேன் உச்சத்தில் இருந்தபோது பும்ராவை எதிர் கொண்டிருந்தால் நிச்சயம் தடுமாறி இருப்பார். அவருடைய 99 என்ற சராசரி பும்ராவை எதிர்கொண்டு இருந்தால் நிச்சயம் சரிந்திருக்கும்.
பும்ராவை எதிர்கொண்டிருந்தால் டான் பிராட்மேனின் சராசரி 35 ஆக இருந்திருக்கும். இதைவிட பும்ராவை எப்படி பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை என கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். கில்கிறிஸ்டின் இந்த கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் பிதாமகன் ஆக இருந்த பிராட்மேனை குறைத்து மதிப்பிட்டு பும்ராவை கில்கிறிஸ்ட் புகழ்ந்துள்ளார்.
இதேபோன்று முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில், பும்ராவின் பந்துவீச்சு செயல்பாட்டிற்கு நான் பத்துக்கு பத்து மதிப்பெண் வழங்குவேன் என்று கூறியிருந்தார். 2024 ஆம் ஆண்டு பும்ராவுக்கு மிகவும் ஒரு ஏற்றத்தை கொடுத்த ஆண்டாக இருந்தது.
கடந்த ஆண்டு 21 போட்டியில் விளையாடிய பும்ரா, மொத்தமாக 86 விக்கெட் வீழ்த்திருக்கிறார்.இதில் நான்கு முறை நான்கு விக்கெட்டுகளையும் ஐந்து முறை ஐந்து விக்கெட்டுகளையும் பும்ரா வீழ்த்தினார். இதேபோன்று ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடரில் பும்ரா 13 போட்டிகள் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். எனினும் பும்ராவுக்கு தற்போது காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.