மும்பை : ஐசிசியின் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா வென்றிருக்கிறார். இதன் மூலம் இந்த விருதை கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு பும்ராவின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. 13 டெஸ்ட் போட்டி விளையாடியுள்ள பும்ரா, 2024 ஆம் ஆண்டு மட்டும் 71 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு ஜோ ரூட் கமிமின்ஸ், ஹாரி புருக்,கமிண்டூ மெண்டீஸ் ஆகியோருடன் பும்ரா போட்டி போட்ட நிலையில் அவருக்கு இந்த விருது கிடைக்கப்பெற்று இருக்கிறது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பும்ரா இந்திய அணிக்கு இரண்டு போட்டிகளில் கேப்டன் ஆகவும் செயல்பட்டு, அதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற வைத்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அது மட்டும் இல்லாமல் அந்நிய மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பும்ரா, "இந்த விருது என்னுடைய தனிப்பட்ட உழைப்புக்கு கிடைத்த விருது கிடையாது".
"என்னுடைய அணியின் சக வீரர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கிடைத்த விருதாக பார்க்கிறேன். என்னுடைய ரசிகர்களால் தான் நான் தொடர்ந்து உத்வேகத்துடன் விளையாடி வருகிறேன். இந்திய அணிக்காக விளையாடுவது என்பது பெருமை. இதற்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன்".
"உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் முகத்தில் சிரிப்பை கொண்டு வருவதை என்னுடைய பணி "என்று பும்ரா கூறியுள்ளார். இதற்கு முன்பு ஐசிசி சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை டிராவிட், கம்பீர்,சேவாக், அஸ்வின், விராட் கோலி ஆகியோர் வென்ற நிலையில் இந்த விருதை வென்ற முதல் இந்திய வேதப்பந்துவீச்சாளர் என்று பெருமை பும்ராவுக்கு கிடைத்திருக்கிறது.