மும்பை : 2024 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கெர்பீல்ட் சோபர்ஸ் விருதை இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நடப்பாண்டில் பும்ரா அபாரமாக செயல்பட்டதன் மூலம் அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.
இந்த விருதுக்கு ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் போட்டி போட்ட நிலையில் இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி பும்ரா இந்த விருதை தட்டிச் சென்றிருக்கிறார்.
இதன் மூலம் இந்த மிகப்பெரிய கௌரவத்தை பெற்ற ஐந்தாவது வீரர் என்ற சாதனையை பும்ரா பெற்றிருக்கார்.

இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட்டும்,2010 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரும், 2016 ஆம் ஆண்டு அஸ்வினும்,2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு விராட் கோலியும் இந்த விருதை வென்றுள்ளனர்.இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையும் பும்ராவுக்கு கிடைத்திருக்கிறது.
ஏற்கனவே பும்ரா 2024 ஆம் ஆண்டு சிறந்த டெஸ்ட் வீரர் விருது மற்றும் 2024 ஆம் ஆண்டு சிறந்த டி20 அணியிலும் சிறந்த டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பும்ரா 2024 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் 13 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
அது மட்டும் இல்லாமல் டெஸ்ட் தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் மற்றும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பவுலிங் ஆவரேஜ் உடன் 200 விக்கெட்டை எடுத்த வீரர் என்ற பெருமையை பும்ரா படைத்திருந்தார்.
அது மட்டும் இல்லாமல் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே டெஸ்ட் தரவரிசை பட்டியலில் அதிக ரேட்டிங்கை பெற்ற வீரர் என்ற பெருமையும் பும்ராவுக்கு 2024 ஆம் ஆண்டு கிடைத்தது. இதேபோன்று 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பும்ரா 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் அந்தத் தொடரின் நாயகன் விருதை கைப்பற்றினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2024 ஆம் ஆண்டு 71 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் கிடைத்திருந்தது. கபில்தேவுக்கு பிறகு ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேக பந்துவீச்சாளர் என்று பெருமையும் பும்ரா பெற்றிருந்தார். இதனால் தான் அவருக்கு இந்த மாபெரும் கௌரவம் கிடைத்திருக்கிறது.