மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை, பொது நிகழ்ச்சி ஒன்றில் ஐசிசி சேர்மன் ஜெய் ஷா "கேப்டன்" என்று அழைத்ததும், ரோஹித் சர்மா முகத்தில் வெளிப்பட்ட மகிழ்ச்சியான ரியாக்ஷன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகும், தனக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்தைக் கண்டு ரோஹித் நெகிழ்ந்துபோனார்.
சமீபத்தில் நடைபெற்ற 'யுனைடெட் இன் ட்ரையம்ப்' (United in Triumph) என்ற நிகழ்ச்சியில், ஐசிசி சேர்மனும், முன்னாள் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா கலந்து கொண்டு பேசினார். அந்த மேடையில் ரோஹித் சர்மாவும் அமர்ந்திருந்தார்.

அப்போது பேசிய ஜெய் ஷா, "நமது கேப்டன் இங்கே அமர்ந்திருக்கிறார். நான் அவரை இப்போதும் 'கேப்டன்' என்றுதான் அழைப்பேன். ஏனென்றால் அவர் இந்திய அணிக்கு இரண்டு ஐசிசி கோப்பைகளைப் பெற்றுத் தந்துள்ளார்," என்று 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளை குறிப்பிட்டு பெருமிதத்துடன் கூறினார். ஜெய் ஷா இப்படிச் சொன்னவுடன், ரோஹித் சர்மா வெட்கத்துடன் கூடிய புன்னகையை வெளிப்படுத்தினார். இந்த வீடியோதான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
தொடர்ந்து பேசிய ஜெய் ஷா, 2024 பிப்ரவரியில் ராஜ்கோட்டில் தான் அளித்த 2024 டி20 உலகக்கோப்பை வாக்குறுதியை நினைவுகூர்ந்தார். "அடுத்த உலகக் கோப்பையில் நாம் மக்களின் இதயங்களையும் வெல்வோம், கோப்பையையும் வெல்வோம் என்று அன்று சொன்னேன். ரோஹித் சர்மா தலைமையில் அதை நாம் சாதித்துக் காட்டினோம். அவர் ஒரு மிகச்சிறந்த தலைவர்." என்றார் ஜெய் ஷா.
ரோஹித் சர்மா தற்போது இந்திய அணியின் எந்தவொரு வடிவத்திற்கும் கேப்டனாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே டி20 & டெஸ்ட்: போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். சூர்யகுமார் யாதவ் டி20 அணிக்கும் மற்றும் சுப்மன் கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கும் கேப்டனாக உள்ளனர்.
2027 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, கடந்த அக்டோபர் 2025-ல் ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் இருந்து பறித்து சுப்மன் கில்லிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனால், ரோஹித் சர்மா தற்போது ஒருநாள் அணியின் கேப்டனாக மட்டும் இருக்கிறார்.
தற்போது கேப்டனாக இல்லாவிட்டாலும், இந்திய கிரிக்கெட்டின் 'நிரந்தர கேப்டன்' தான்தான் என்பதை ஜெய் ஷாவின் வார்த்தைகளும், ரோஹித்தின் புன்னகையும் மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளது.