ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மோட்டேரா மைதானத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி லெவன் அணிக்கும், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா லெவன் அணிக்கும் நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய் ஷா லெவன் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு களம் கண்ட சவுரவ் கங்குலி 32 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) 89ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக பிசிசிஐ தலைவர் கங்குலி லெவன், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா லெவன் அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 1,10,000 பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் கொண்ட மோட்டேரா மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஹைதராபாத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவரருமான முகமது அசாருதீன், முன்னாள் வீரர்கள் பிரிஜேஷ் படேல், ஜெய்தேவ் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.12 ஓவர்கள் கொண்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜெய் ஷா லெவன் அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜெயதேவ் ஷா 16 பந்துகளில் 38 ரன்களும், அசாருதீன் 22 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர்.

வெற்றி இலக்கை துரத்திய கங்குலி லெவன் அணி 12 ஓவர்களில் 100 ரன்கள் மட்டுமே எடுத்து 28 ரன்களில் தோல்வி அடைந்தது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு களத்தில் இறங்கிய சவுரவ் கங்குலி மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தார். 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். வயசாயிடுச்சா... எனக்கா.. என கூறுவதுபோல் பேட்டிங் செய்த சவுரவ் கங்குலிக்கு நெட்டின்சன்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.