சென்னை: தமிழ்நாட்டுக்கு இந்த "வீக் என்ட்", பரபரப்பான வாரம்தான். இன்று ஜெயலலிதா 5வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார். நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 6வது ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.
வழக்கில் ஜெயலலிதா ஜெயித்து விட்டார், மீண்டும் முதல்வராகியுள்ளார். அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நாளைய போட்டியில் வெற்றி பெற்று 3வது முறையாக சாம்பியன் ஆகுமா என்ற ஆவல் ரசிகர்களிடம் மொய்த்துக் கொண்டிருக்கிறது.
217 நாள் வீட்டு வாசத்தை முடித்துக் கொண்டு நேற்றுதான் முதல் முறையாக தனது போயஸ் தோட்ட வீட்டை விட்டு வெளியே வந்தார் ஜெயலலிதா.
அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று தன்னிடம் சிக்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை அழகாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
ஜெயலலிதா இன்று முதல்வராகப் பதவியேற்றபோது அதைக் காண வந்த பார்வையாளர்களில் ஒருவர் என்.சீனிவாசன். அதாவது பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன்.
இதே சீனிவாசனுக்குச் சொந்தமானதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ். நாளை இந்த அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை இறுதிப் போட்டியில் சந்திக்கிறது.
ஒரே கேப்டன் தலைமையில் தொடர்ந்து செயல்படும் ஒரே ஐபிஎல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான். டோணி தலைமையில் 6வது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்னை முன்னேறியுள்ளது. இதில் 2 முறை கோப்பையை வென்றுள்ளது. நாளைய போட்டியில் சென்னை அணி வென்றால் அது 3வது கோப்பையாக இருக்கும்.
தமிழகத்தின் அரசியல் "ராணி"யே வென்று முதல்வராகி விட்டார்.. சென்னை சூப்பர் "கிங்ஸ்" மட்டும் சும்மாவா இருப்பார்கள்.. !