சென்னை: நீண்ட இடைவெளிக்கு பின் இஷான் கிஷன் மீண்டும் தனது திறமையை நிரூபித்து அசத்தியுள்ளார். கடந்த 8 மாதங்களில் இஷான் கிஷனின் வாழ்க்கையில் ஏராளமான மோசமான அனுபவங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பிசிசிஐ நிர்வாகிகளை பகைத்து கொண்டது, ஐபிஎல் தொடரில் சொதப்பியது, ரோஹித் சர்மாவை எதிர்த்தது என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
இதனால் 26 வயதிலேயே இஷான் கிஷனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருமோ என்று ரசிகர்கள் பலரும் கவலை கொண்டனர். ஏனென்றால் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகவேக இரட்டை சதத்தை விளாசிய இஷான் கிஷன், இந்த ஆண்டு பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்தே நீக்கப்பட்டார். இதன்பின் தேர்வு குழு நிர்வாகிகள் கொடுத்த அட்வைஸ் காரணமாக இஷான் கிஷன் உள்ளூர் கிரிக்கெட்டை ஆட தொடங்கினார்.

அதன் முதல் கட்டமாக புச்சி பாபு தொடரில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் களமிறங்கினார். மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 92 ரன்கள் எடுத்திருந்த போது அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி 86 பந்துகளில் சதத்தை எட்டினார். இதனால் பலரும் இஷான் கிஷனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில் 2வது இன்னிங்ஸில் மத்திய பிரதேச அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதில் ஜார்க்கண்ட் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற, இஷான் கிஷன் நிதானமாக விளையாடினார். ஒரு கட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மத்திய பிரதேச அணியின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகளும், ஜார்க்கண்ட் அணியின் வெற்றிக்கு 12 ரன்களும் தேவையாக இருந்தது.
அப்போது ஆகாஷ் ராஜாவத் வீசிய பந்தில் 6, 0, 6 என்று அசால்ட்டாக இரு சிக்சர்களை விளாசி ஜார்க்கண்ட் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 58 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதன் மூலமாக இஷான் கிஷன் தனது ஃபார்மை மீண்டும் மீட்டெடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து துலீப் டிராபி தொடரும் நடக்கவுள்ள நிலையில், இஷான் கிஷன் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இருந்தாலும் ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் கூட்டணியின் முடிவு முக்கியமானதாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.