சென்னை: உங்க வீட்டுல இருக்கா.. பக்கத்து வீட்டுல இருக்கா.. எங்க வீட்டுலயும் இருக்குங்க.. என இமான் அண்ணாச்சி விளம்பர வசனம் போல கிரிக்கெட் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் இன்று சொல்லிக்கொண்டனர். எல்லோர் வீட்டிலும் இருந்தது என்ன என்றுதானே கேட்கிறீங்க.. பப்பரிங்தான்ங்க (Buffering). ஐபிஎல் 2023 லைவ் ஸ்ட்ரீமிங் Jio cinema ஓடிடி தளத்தில் இலவசமாக ஒளிபரப்பப்படும் என்ற அறிவிப்பு வந்ததுமே ரசிகர்கள் வயிற்றில் புளியை கரைத்தது. ஏனெனில் அவர்கள் பழைய ரெக்கார்ட் அந்த மாதிரி. அது இன்று சிஎஸ்கே குஜராத் போட்டியில் மறுபடியும் தெளிவாக தெரிந்தது.
வழக்கமாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஐபிஎல் ஒளிபரப்பப்படும். ஆனால் சந்தாதாரர்கள்தான் பார்க்க முடியும். ஜியோ சினிமாவில் அது இலவசம். இணையதள வசதி இருந்தால் போதும் சந்தா இல்லாமல் பார்க்கலாம். அதுவும், ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட 12 மொழிகளில் 4K ரெசல்யூஷனில் (அல்ட்ரா HD) இலவசமாக வழங்குவதாக அறிவித்தது ஜியோ சினிமா. அதேநேரம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை தொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்பும்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர்களை ஸ்டார் நிறுவனம்தான் டிவியில் காண்பிக்கும் அதில் மாற்றமில்லை. பிசிசிஐக்கு மொத்தம் 23,575 கோடிகளை வழங்கி அடுத்த 5 வருடங்களுக்கான கிரிக்கெட் தொடர் உரிமையை பெற்றுள்ளது. 2023 மற்றும் 2024 இல் 74 போட்டிகளையும், 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் 84 போட்டிகளை ஒளிபரப்ப உள்ளது. பின்னர் 2027 ஆம் ஆண்டில் 94 போட்டிகள் ஸ்டார் டிவியில் ஒளிபரப்பப்படும்.
இதெல்லாம் டிவியில் பார்க்க ஓகே. ஆனால் ஜியோ சினிமாவை ஓடிடியில் பார்க்க வேண்டுமே, ஆசையாக செல்போனை கையில் எடுத்தவர்களுக்கு ஆரம்பித்தது சிக்கல். சுற்று சுற்று என சுற்றியது ஜியோ சினிமா. சில நேரங்களில் மேட்ச் ஆரம்பித்த பிறகு அதுவாக பின்னால் வந்துவிட்டது. நாம எதுவுமே செய்யவில்லையே என்று, கையை பார்த்தனர் நெட்டிசன்கள். ஆனால் அது கையின் குற்றமில்லை, ஜியோ சினிமாவின் குற்றம் என்பது பிறகுதான் புரிந்தது.

இதை நெட்டிசன்கள் பலரும் ட்விட்டரில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்தனர். அடுத்தடுத்த போட்டிகளிலாவது இந்த குறைபாடை சீர் செய்ய வேண்டும் ஜியோ சினிமா. அதேநேரம், நிஜமாகவே 4கே துல்லியம் தெளிவாகவே தெரிந்தது. அதில் குறை சொல்ல எதுவும் இல்லை. தமிழ் வர்ணனையும் திருப்திகரமாகவே இருந்தது. ஸ்டார் ஸ்போர்ட்சில், பத்ரியோ, அர்னால்டோ வந்து அரைகுறை தமிழில் பேசி நமது பிபியை ஏற்றுவார்களே அதுபோன்ற குறைபாடு இதில் இல்லை. அதேநேரம், ஸ்ரீகாந்த் மாதிரி பட்டாசான வர்ணனையும் இல்லை. பேப்பர் போட்ட ஊழியர் வேலை பார்ப்பதை போல கடமையை மட்டும் செய்தார்கள் என்று சொல்லலாம்.