மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் போட்டி சாதனையை முறியடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் பேசி வருகின்றனர். அதிலும் குறிப்பாக முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் வாகன் இந்தியாவை சீண்டும் வகையில் சில கருத்துக்களை பேசி இருந்தார். அதற்கு சுனில் கவாஸ்கர் கடுமையாக பதிலடி கொடுத்து இருக்கிறார்.
தற்போது டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களிலேயே அதிக சதம் அடித்தவரும், அதிக ரன்கள் குவித்தவருமாக இருக்கிறார் ஜோ ரூட். அவர் 34 டெஸ்ட் சதம் அடித்து இருக்கிறார். 12,402 டெஸ்ட் ரன்கள் குவித்து இருக்கிறார். தற்போது 33 வயதாகும் நிலையில் அவரால் சச்சின் டெண்டுல்கரின் அதிக டெஸ்ட் ரன்கள் என்ற சாதனையான 15,921 ரன்களை முந்த முடியும் என்ற பேச்சு உள்ளது.

அது குறித்து மைக்கேல் வாகன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "ஜோ ரூட் இதே போல ஆடினால் நிச்சயமாக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார். ஒருவேளை ஜோ ரூட் சச்சினின் சாதனையை முறியடித்தால் அதுவே கிரிக்கெட்டுக்கு நடக்கும் மிக நல்ல விஷயமாக இருக்கும். ஏனெனில், அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் ஒரு இங்கிலாந்து வீரர் இருப்பதை பிசிசிஐ நிச்சயம் விரும்பாது. ஒரு இந்தியர் அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்க வேண்டுமென அவர்கள் நினைப்பார்கள். அதனால், அதிக டெஸ்ட் போட்டியில் ஆடுவார்கள். அதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்." என்று பேசி இருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள சுனில் கவாஸ்கர், "இந்தியாவை வேண்டுமென்று தாக்கி பேசும் நபர்களுக்கு ஆக்ரோஷமாக பதில் அளித்தால் மட்டுமே நாம் சொல்வது புரியும். சமீபத்தில் ஒருவர் ஜோ ரூட், அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லது என்று பேசியிருந்ததை கேள்விப்பட்டேன். இப்போது சச்சின் டெண்டுல்கர் அந்த ரெக்கார்டுகளை வைத்திருப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் எந்த வகையில் மோசமாக இருக்கிறது? என்பதை எனக்கு தயவு செய்து சொல்லுங்கள்." என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், "ஒரு இங்கிலாந்து வீரர் அந்த சாதனைகளை செய்து இருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அது எந்த வகையில் நன்மை பயக்கும் என்பதையும் எனக்கு சொல்லுங்கள். தயவு செய்து எங்களுக்கு இதை புரிய வையுங்கள். அதுமட்டுமின்றி விசித்திரமாக, பிசிசிஐ டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பவில்லை என்ற ஒரு தவறான பார்வை மற்ற நாடுகளுக்கு உள்ளது. ஒவ்வொரு சீசனிலும் இந்தியா ஆறுக்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சேர்த்து இந்தியா பல டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. ஐபிஎல் தொடர் மாபெரும் வெற்றி பெற்றது என்பதற்காகவே பிசிசிஐ டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்தவில்லை, அதை வளர்க்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் சொல்வது தவறானது." என்றார் சுனில் கவாஸ்கர்.
விராட் கோலியால் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை செய்ய முடியாது என்ற கருத்தும் உள்ளது. தற்போது 35 வயதாகும் நிலையில் விராட் கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8848 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். சச்சின் சாதனையை ஜோ ரூட் முறியடித்தால் இந்தியரிடம் இருந்து அந்த சாதனை இங்கிலாந்து வசம் சென்று விடும். அடுத்து இந்தியா புதிய வீரர் ஒருவரை உருவாக்கித்தான் அந்த சாதனையை எட்ட முடியும்.