"கோலி இந்தியாவின் சிறந்த பீல்டர் அல்ல..".. விராட் கோலியின் பலவீனத்தை ஓப்பனாக உடைத்த ஜாண்டி ரோட்ஸ்
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்தியாவின் மிகச்சிறந்த பீல்டர் கிடையாது என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் கோலியின் ஆக்ரோஷமான குணம் குறித்தும் அவர் எச்சரித்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பீல்டராகக் கருதப்படும் ஜாண்டி ரோட்ஸ், யூடியூப் நேர்காணல் ஒன்றில் விராட் கோலியின் பீல்டிங் குறித்துப் பேசியுள்ளார்.
37 வயதான விராட் கோலி தற்போதும் மைதானத்தில் அதிவேகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தாலும், அவர் இந்தியாவின் சிறந்த பீல்டர் அல்ல என்றார். இது குறித்து ரோட்ஸ் பேசுகையில்: "ஒரு பீல்டிங் பயிற்சியாளராக நான் கோலியை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். அவர் ஒரு நல்ல பீல்டரே தவிர, இந்தியாவின் மிகச்சிறந்த பீல்டர் கிடையாது. அவரது ஆற்றல் அசாத்தியமானது. ஆனால், எல்லாமே நன்றாகச் செல்லும் போது அவரது அதீத ஆக்ரோஷம் அணிக்கு உதவும். அதே நேரம், அணிக்கு சாதகமில்லாத சூழ்நிலை ஏற்படும் போது அவரது ஆக்ரோஷம் எங்கு போகும்? அது டிரெஸ்ஸிங் ரூமில் தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கலாம் என்பதுதான் என் கவலை" என்றார்.

சச்சின் மற்றும் கோலிக்கு இடையிலான ஒப்பீடு குறித்துப் பேசிய ஜாண்டி ரோட்ஸ், "கோலி தனது உடற்தகுதி மற்றும் மன வலிமையால் சச்சினின் சாதனைகளை விடவும் முந்த வாய்ப்புள்ளது. ஆனால், ஏன் இருவரையும் ஒப்பிட வேண்டும்? இந்தியா அடுத்தடுத்து இரண்டு தலைசிறந்த ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் கோடிக்கணக்கானமக்களுக்கு உத்வேகமாக இருந்துள்ளனர். இந்த சாதனையை நாம் கொண்டாட வேண்டுமே தவிர, இவர்களில் யார் சிறந்தவர் என்று ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது" என்று அறிவுறுத்தியுள்ளார்.
காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தற்போதைய ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட விராட் கோலி இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளார். 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் விளையாட அவர் திட்டமிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
