ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா சில்வாரின் தாய், விராட் கோலியை கட்டியணைத்து முத்தம் கொடுத்து அன்பை பொழிந்த வீடியோ இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ட்ரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. இதன் 2வது நாள் ஆட்டத்தில் சதம் விளாசிய விராட் கோலி, 121 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். முன்னதாக முதல் நாள் ஆட்டத்தின் போது, வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா சில்வா களத்தில் விராட் கோலியின் ரசிகராக செயல்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

விக்கெட் கீப்பிங்கின் போது ஜோஷ்வா சில்வா, "சதத்தை விளாசிவிடுங்கள் விராட்" என்று கூறி இருப்பார். அதற்கு விராட் கோலி, என்னை விடவும் நான் சதம் விளாசுவதில் நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களே என்று கிண்டல் செய்தார். அதேபோல் மீண்டும் ஜோஷ்வா சில்வா, எனது அம்மா உங்களின் ஆட்டத்தை பார்ப்பதற்காக நேரில் வந்திருப்பதாக என்னிடம் கூறினார். இதனை என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் மகிழ்ச்சியாக உள்ளது என்று விராட் கோலியிடம் தெரிவித்தார்.
கிரிக்கெட் களத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோஷ்வா சில்வா, விராட் கோலியிடம் ரசிகனை போல் ஆசை ஆசையாக பேசியது இந்திய ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்திற்கு பின் பேருந்தில் ஹோட்டல் செல்வதற்காக மைதானத்தில் இருந்து வெளியில் வந்தார். அப்போது விராட் கோலியை சந்திப்பதற்காக ஜோஷ்வா சில்வாவின் தாய் காத்திருந்தார்.
அப்போது விராட் கோலியை பார்த்ததும், ஜோஷ்வா சில்வாரின் தாய் கட்டியணைத்து முத்தம் கொடுத்து அன்பை பொழிந்தார். இதையடுத்து அவருடன் பேசிய விராட் கோலி, புகைப்படம் எடுத்துக் கொண்டு வழியனுப்பி வைத்தார். இதனால் ஜோஷ்வா சில்வாரின் தாய் நெகிழ்ச்சியில் கண்கலங்கினார். வெஸ்ட் இண்டீஸில் விராட் கோலிக்கு இவ்வளவு தீவிர ரசிகர்கள் இருக்கிறார்களா என்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் ஜாம்பவான் வீரர்களுக்கு சில ரசிகர்களாக இருப்பார்கள். தோனிக்கு பட்லரை போல், சச்சினுக்கு ஏராளமானோர் எதிரணிகளில் இருந்து ரசிகர்களாக இருப்பார்கள். ஆனால் எதிரணி வீரரின் தாய் விராட் கோலியின் தீவிர ரசிகராக இருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.