லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்டர்சனுடனான மோதல் விவகாரத்தில் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்வதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும் ஆண்டர்சனுக்கும் எந்த தண்டனையும் விதிக்கப்படவும் இல்லை.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் மோதலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் ரவீந்திர ஜடேஜா விதிகளை மீறி செயல்பட்டதாக அவருக்கு போட்டி சம்பளத்தில் 50% அபராதம் விதித்தது ஐ.சி.சி.
இதற்கு இந்திய அணி கேப்டன் டோணி கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் தடையை எதிர்த்து அப்பீல் செய்ய முடிவு செய்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக லூயிஸ் விசாரணை நடத்தினார். 6 மணி நேர விசாரணைக்கு பிறகு, ஆண்டர்சன் மற்றும் ஜடேஜா இருவரும் எந்த தவறும் செய்யவில்லை எனவும், இவ்விவகாரத்தில் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்வதாகவும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
மேலும் சம்பவம் நடந்த வீரர்களின் அறையின் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்ட கேமிரா அந்த சமயத்தில் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதற்கு பொறுப்பானவர்கள் பல்டி அடித்தனர். போதிய ஆதாரம் இல்லாததால் ஆண்டர்சன் தடையில் இருந்து தப்பி இருக்கிறார். இந்த தீர்ப்பால் இந்திய அணியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.