கவுகாத்தி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் ககிசோ ரபாடா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இன்றையப் போட்டியில் விளையாடவில்லை என்று கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக மீண்டும் நாதன் எல்லீஸ் களமிறங்கியுள்ளார். ராஜஸ்தான் அணியின் பலமான பேட்டிங் வரிசையை பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இன்று தொடங்கியுள்ள 8வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இரண்டாம் பாதி ஆட்டத்தில் மைதானத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில், நாங்களும் டாஸ் வென்றிருந்தால் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்போம். நிச்சயம் பனிப்பொழிவு அதிகம் இருக்கும். ஆனால் அதிக பனிப்பொழிவு இருக்கும் சூழலுக்கு நாங்கள் பழகிக் கொண்டோம். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் தான் விளையாடுகிறோம் என்று தெரிவித்தார். இதனால் பஞ்சாப் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ககிசோ ரபாடா அணியில் விளையாடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றதால், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வீரர்கள் முதல் சுற்று ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவில்லை. தற்போது ஐபிஎல் அணிகளுடன் தென்னாப்பிரிக்க வீரர்கள் இணைந்துள்ளனர். நேற்றையப் போட்டியிலேயே குஜராத் அணிக்காக டேவிட் மில்லர் மற்றும் டெல்லி அணிக்காக அன்ரிக் நார்கியே களமிறங்கி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பஞ்சாப் அணிக்காக ரபாடா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பயண களைப்பு காரணமாக ரபாடா இன்றையப் போட்டியில் களமிறங்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. 13 மணி நேரத்திற்கும் அதிகமாக பயணம் செய்ததால், ரபாடா ஓய்வில் இருப்பதாகவும், அடுத்தப் போட்டியில் களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ராஜஸ்தான் அணியின் வலிமையான பேட்டிங் வரிசையை ரபாடா இல்லாமல் பஞ்சாப் அணி எப்படி கட்டுப்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.