மும்பை: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளில் உள்ள 5 வீரர்கள் 2008 யு19 உலகக்கோப்பை தொடர் தற்போது பல்வேறு ஐசிசி தொடர்களிலும் விளையாடி வருவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளது. லீக் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 9 போட்டிகளிலும் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதேபோல் நியூசிலாந்து அணி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 4வது இடம்பிடித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் கம்பேக் கொடுத்திருப்பதால், அந்த அணி அசாத்திய வலிமையோடு உள்ளது. அதேபோல் இந்திய அணி வீரர்கள் அனைவரும் சிறந்த ஃபார்மில் இருப்பதால், வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணியில் 5 வீரர்களுக்கு இடையில் 16 ஆண்டு கால பயணம் இருப்பது தெரிய வந்துள்ளது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற யு19 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. அந்த அணியில் விராட் கோலியுடன் ரவீந்திரா ஜடேஜாவும் இடம்பெற்றிருந்தார். அதன்பின் இருவருமே இந்திய அணியில் இடம்பிடித்து ஒன்றாக பயணித்து வருகின்றனர்.
அதேபோல் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற யு19 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக கேன் வில்லியம்சன், ட்ரென்ட் போல்ட் மற்றும் டிம் சவுதி உள்ளிட்டோர் இணைந்து விளையாடினர். இவர்கள் மூவரும் இன்று வரை நியூசிலாந்து அணிக்காக இணைந்து விளையாடி வருகின்றனர். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக இவர்கள் 5 பேரும் சர்வதேச கிரிக்கெட்டில் பயணித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கடைசி முறையாக இவர்கள் 5 பேரும் ஐசிசி தொடரின் நாக் அவுட் போட்டியில் விளையாட உள்ளனர். இதனால் இவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன், கடைசி நாக் அவுட் அடியை யார் கொடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.