அகமதாபாத்: குஜராத் அணிக்காக முதல்முறையாக களமிறங்க உள்ள நட்சத்திர வீரர் வில்லியம்சன், அகமதாபாத் மைதானத்தின் நினைவுகளையும், ஹர்திக் பாண்டியா கேப்டன்சி குறித்தும் மனம் திறந்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டு பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங், யுக்தி எல்லாவற்றையும் கடந்து, மன உறுதி சார்ந்தது. கிரிக்கெட் களத்தில் மன உறுதியோடு செயல்படும் வீரர்களே ஜாம்பவான்களாக வலம் வருகின்றனர்.
ஆனால் அப்படி ஜாம்பவான்களாக வலம் வந்த வீரர்களும் சமயங்களில் களத்தில் சிதறடிக்கப்படுவார்கள். மைதானத்தின் நாலாப்புறத்தையும் ஆதிக்கம் செலுத்திய வீரர்கள், ரசிகர்களுக்கு மத்தியில் குன்றி போய் வெளியேறுவர்.

அப்படியான சூழல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் ஏராளமான முறைகள் நடைபெற்றுள்ளது. முக்கியமாக ஹைதபாபாத் அணிக்காக ஆடிய டேவிட் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் ஃபார்ம் இல்லாததால் அணி நிர்வாகத்தால் கழற்றிவிடப்பட்டனர். எத்தனையோ முறை அணிக்காக முன் நின்றும், அணி நிர்வாகங்களால் இருவரும் கழற்றிவிடப்பட்டனர்.
டேவிட் வார்னர் இதுபோன்ற தருணங்களில் இருந்து வேகமாக வெளியில் வந்தாலும், வில்லியம்சனுக்கு அப்படியான ஆட்டங்கள் அமையவில்லை. ரசிகர்களால் சிவசாமியாக கொண்டாட்டப்பட்ட வில்லியம்சன், நியூசிலாந்து அணிக்காக விளையாடினாலும், பெரியளவில் ரன்கள் சேர்க்க முடியவில்லை. கேப்டன்சியை உதறிவிட்டு, களம் கண்ட இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார்.
ஆனால் டி20 கிரிக்கெட்டில் எப்படி ஆடுவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் வில்லியம்சனை எந்த அணியும் ஏலத்தில் வாங்க முன்வராத நிலையில், குஜராத் அணி மட்டுமே ஏலத்தில் வாங்கியது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்து வில்லியம்சன் கூறுகையில், பல்வேறு அணிகளுக்காக பல்வேறு தருணங்களில் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். அதற்காக அனைத்து அணிகளிலும் கேப்டனாக செயல்பட வேண்டும் என்பது அல்ல. எந்த அணிக்காக ஆடினாலும் உண்மையாக தீவிரத்தன்மையுடன் அனைத்து துறைகளிலும் ஈடுபட வேண்டும்.

கேப்டனாக இருப்பது எப்போதும் முக்கியமானதல்ல. ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடுவதற்கு ஆவலாக இருக்கிறேன். சுப்மன் கில் சிறந்த வீரராக உருவாவதற்கான அனைத்து திறமைகளுடன் விளையாடி வருகிறார். அகமதாபாத்தை பொறுத்த வரைக்கும் எனக்கு நிறைய நினைவுகள் உள்ளது. எனது முதல் டெஸ்ட் சதம் அகமதாபாத் மைதானத்தில் தான் வந்தது.
அப்போது இருந்த மைதானத்திற்கும் இப்போது உள்ள மைதானத்திற்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. இருப்பினும் குஜராத் அணிக்காக மீண்டும் அகமதாபாத் மைதானத்தில் களமிறங்கப் போகிறோம் என்பதே புத்துணர்வை கொடுக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்திய மைதானக்களில் வில்லியம்சன் ஆடும்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், அகமதாபாத் மைதானத்தில் சிறந்த சராசரியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.