மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அடுத்த வாரம் பெங்களூருவில் பயிற்சி முகாமில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணி நிர்வாகத்திற்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ் சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடருக்கு முன்பு விராட் கோலியும் ரோகித் சர்மாவும் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வீரருக்கும் உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் முக்கியமானதும் விராட் கோலி, இல்லை ரோகித் சர்மாவோ இல்லை வேறு ஏதேனும் நட்சத்திர வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் எவ்வளவு விளையாட இருக்கிறார்கள். இனி தலைசிறந்த வீரர்கள் அனைவருமே சிறிதளவு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு மட்டும் அது பயனளிக்காது.
அவர்களுக்கு எதிராக விளையாடும் அடுத்த தலைமுறை வீரர்களுக்கும் நன்மையாக அமையும். ரோகித் சர்மா நல்ல கேப்டனாக இருக்கிறார். ஆனால் அவர் இன்னும் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும். இங்கிலாந்து அணி தற்போது எப்படி கிரிக்கெட் விளையாடுகிறார்களோ அதே போல் நாமும் யோசித்து செயல்பட வேண்டும். இங்கிலாந்தின் பேஸ்பாலை எடுத்துப் பாருங்கள். அது பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கிறது.
இங்கிலாந்து ஆஸ்திரேலியா மோதிய ஆஷஸ் தொடர் சமீபத்தில் நான் பார்த்ததில் இருந்தே சிறந்த போட்டியாகும். கிரிக்கெட் என்றால் அப்படித்தான் இனி விளையாட வேண்டும். இனி டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை நோக்கி செல்லுங்கள். டிராவை நோக்கி விளையாடாதீர்கள் என கபில்தேவ் கூறியுள்ளார். ஆசிய கோப்பை தொடர் இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெற உள்ள நிலையில் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் சமீபத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு பெரிய அளவில் விளையாடவில்லை.
கடைசியாக ஜனவரி மாதத்தில் தான் நியூசிலாந்து அணிக்கு எதிராக இருவரும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடினார்கள். அதன் பிறகு டெஸ்ட், டி20 என ரோகித் சர்மாவும் விராட் கோலியும் விளையாடினார்கள். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் இடம் பெற்ற ரோகித் சர்மா ஒரு போட்டியில் விளையாட விராட் கோலி மூன்றிலுமே ஓய்வில் இருந்து இருக்கிறார். இந்த சமயத்தில் தியோதர் கோப்பை போன்ற ஒருநாள் போட்டிகள் ஆவது இந்த நட்சத்திர வீரர்கள் விளையாடிருக்கலாம் .