மும்பை : இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு அதிகளவு காசு வந்துவிட்டதால் திமிர் பிடித்து விட்டதாக கபில்தேவ் குற்றம்சாட்டியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் இந்திய அணி தற்போது வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
விராட் கோலி, ரோகித் ஆகியோர் இல்லாத நிலையில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல் ஆகியோர் மோசமாக விளையாடி இருக்கிறார்கள். தற்போது ராகுலும், ஸ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக விளையாடவில்லை.

இதனால் உலககோப்பையில் இந்திய அணி எப்படி விளையாட போகிறது என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் வந்துவிட்டது. இந்த நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு ஈகோ வந்துவிட்டதாக கபில்தேவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக அளவு காசு வந்துவிட்டதால், ஈகோவும், திமிரும் கூடவே வந்துவிட்டது.
இதனால் கிரிக்கெட்டில் நமக்கு எல்லாம் தெரியும். நமக்கு எந்த உதவியும் தேவையில்லை என்று நினைகிறார்கள். கவாஸ்கர் போன்ற ஜாம்பவான் எல்லாம் உங்கள் அருகில் தான் இருக்கறார்கள். அப்படி இருக்கும் போது அவரிடம் உதவி கேட்பதில் உங்களுக்கு அப்படி என்ன கஷ்டம். அவர் 50 ஆண்டுகளை கிரிக்கெட்டிலேயே வாழ்ந்தவர்.

அவருக்கு எங்கிருந்து வெயில் அடித்தால், புல் எப்படி வளரும் என்ற கிரிக்கெட்டில் உள்ள அனைத்தும் தெரியும். அவரிடம் நீங்கள் சென்று பேசினாலே உங்களுக்கு புது ஐடியா கிடைக்கும். சிலருக்கு உண்மையிலேயே ஈகோ இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், நமக்கு உதவி தேவையில்லை என்று நினைக்கலாம். ஆனால், வெளியில் இருந்து சிலர் கருத்துக்களை கூறினால், அது நமக்கு புதிய கண்ணோட்டத்தை கொடுக்கும் என்றும் கபில்தேவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் சுப்மன் கில், கடந்த சில போட்டிகளில் குறிப்பாக வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. ஆனால், அவர் தற்போது கோடியில் சம்பாதிக்கிறார். இதனால், இப்படிப்பட்ட வீரர்கள் தாங்கள் தடுமாறும் போது சீனியர்களின் உதவிகளை நாடுவதில்லை என்பதையே மறைமுகமாக கபில்தேவ் குற்றம்சாட்டியுள்ளார்.