பெண் தொகுப்பாளர்கள்
அர்ச்சனா விஜயா, ஷிபானி தன்டேகர், மயந்தி லேங்கர்.. சமீபத்தில் தமிழில் பாவனா என பலரும் இப்போது புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டனர். இந்த வரிசையில் வருபவர்தான் கரீஷ்மா கோடக். முன்பெல்லாம் கவாஸ்கர், சஞ்சய் மஞ்ச்ரேகர், ரவி சாஸ்திரி என பலர் இருந்தனர். ஆனால் அவர்களது இடத்தை இப்போது இந்த பெண்கள் படை கைப்பற்றி விட்டது.
இங்கிலாந்து பெண் கரீஷ்மா கோடக்
கரீஷ்மா கோடக் இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளிப் பெண். இவர் ஐபிஎல் 2013 தொடரின் ஒரு முக்கிய தொகுப்பாளர் ஆவார். சோனி மேக்ஸ் டிவியில் இவர் கலக்கலாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 2012 பிக் பாஸ் நிகழ்ச்சியில்தான் இவர் கலந்து கொண்டு புகழின் உச்சத்திற்குப் போனார். அதன் பிறகே இவர் பிரபலமானார். ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் டி10 லீக், ரோட் சேப்டி வேர்ல்ட் சீரிஸ் தொடர்களையும் கூட தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனது இதயத்திற்கு நெருக்கமானது
கிரிக்கெட் குறித்து இவரிடம் கேட்டபோது, கிரிக்கெட் எனது இதயத்திற்கு நெருக்கமானது. அதனால்தான் ஐபிஎல் போட்டிகளை என்னால் எளிதாக தொகுத்து வழங்க முடிந்தது. இந்தியா முழுவதும் செல்ல நான் ஆர்வமாக உள்ளேன். அதேபோல ஐபிஎல் போட்டிகளை தொகுப்பதிலும், போட்டிகளை பார்த்து ரசிப்பதற்கும் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.
திரில்லான விஷயம்
நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்குவதும், அதைப் பார்த்து ரசிப்பதும், பல்வேறு வீரர்களுடன் உரையாடுவதும் மிகவும் திரில்லிங்கான விஷயமாகும். அதை நான் ரசித்து செய்தேன். உலகின் மிகச் சிறந்த வீரர்களுடன் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது மிகப்பெரிய விஷயம் இல்லையா. பல புதிய நண்பர்கள் எனக்கு இதன் மூலம் கிடைத்தனர். எனது உலகமும் விரிவடைந்தது என்றார் கோடக்.
ஏமாற்றமடைந்த மயந்தி லேங்கர்
மறுபக்கம், மயந்தி லேங்கர் கசப்பான அனுபவம் கொண்டுள்ளார். இதுகுறித்து கூறுகையில், நான் பலமுறை சோனி டிவியால் நிராகரிக்கப்பட்டேன். இத்தனைக்கும் நான் பல போட்டித் தொடர்களை நடத்திய அனுபவம் கொண்டவள். உலகக் கோப்பைத் தொடரையும் கூட தொகுத்து வழங்கியுள்ளேன். 2011 தொடரில் என்னை அவர்கள் டெஸ்ட்டுக்காக கூப்பிட்டனர். போய் முடிந்து திரும்பியதும் மீண்டும் அழைத்து புதிய முகமாக பார்க்கிறோம் என்று கூறி விட்டனர் என்றார்.