"பும்ரா ஒரு வருடம் ஓய்வு எடுக்கட்டும் அவருக்கு பதில்..".. முன்னாள் வீரர் சொன்ன அதிரடி யோசனை
மும்பை: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அடிக்கடி காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓராண்டு வரை நீண்ட ஓய்வு எடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் கர்சன் காவ்ரி கூறி இருக்கிறார். மேலும், மூத்த வீரர்கள் முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரை மீண்டும் இந்திய அணிக்கு அழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பும்ராவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக, இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகி உள்ளார். அவருக்குப் பதிலாக ஜம்மு-காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2-3 ஆண்டுகளாக பும்ரா பல முக்கிய தொடர்களில் விளையாட முடியாமல் தொடர் காயங்களால் அவதிப்பட்டு வருவது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் கர்சன் காவ்ரி, "பும்ரா 5 முதல் 6 மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை நீண்ட ஓய்வு எடுத்துக்கொண்டு, தனது உடற்தகுதியை 100 சதவீதம் மீட்டெடுக்க வேண்டும். பாதி உடற்தகுதியுடன் விளையாடும்போது, தொடரின் பாதியிலேயே அவரது காயம் மேலும் மோசமடைகிறது. முழுமையாகத் தகுதி பெற்றால் மட்டுமே அவரை அணியில் சேர்க்க வேண்டும்" என்றார்.
பும்ராவின் பணிச்சுமையைக் குறைக்க முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரை மீண்டும் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று காவ்ரி வலியுறுத்தியுள்ளார். "ஷமியும், புவனேஷ்வரும் ஐபிஎல் தொடரில் எந்த காயமும் இல்லாமல் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். புவனேஷ்வரை டி20 போட்டிகளிலும், ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை டெஸ்ட் போட்டிகளிலும் சுழற்சி முறையில் பயன்படுத்தலாம். இது பும்ரா மீதான அழுத்தத்தை பெருமளவில் குறைக்கும்" என்று அவர் கூறினார்.
பும்ராவின் பணிச்சுமையைக் குறைக்க அணி நிர்வாகம் அவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மற்றொரு முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ராஜு குல்கர்னியும் கருத்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
