ஜமைக்கா: கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் செண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ட்ரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் விளாசி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.
கரீபியன் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரின் 12வது லீக் போட்டியில் செண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணியை எதிர்த்து ட்ரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற ட்ரின்பேகோ அணி கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய செண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் பிளெட்சர் 17 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 32 ரன்கள் விளாசினார். அதேபோல் கேப்டன் ஷஃபேனா ரூதர்ஃபோர்டு 38 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 62 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார்.
ட்ரின்பேகோ அணி தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கிய டிகேஆர் அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின்னர் வந்த பூரன் அதிரடியில் மிரட்டினார். சிறப்பாக ஆடிய அவர், 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். பின் அவரும் 32 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, களத்திற்கு கேப்டன் பொல்லார்ட் வந்தார்.
தொடர்ந்து ஆட்டம் சரிசமமான சென்ற நிலையில், 14 ஓவர்கள் முடிவில் 120 ரன்கள் சேர்க்கப்பட்டது. அந்த நேரத்தில் பந்துவீசிய நவீத் ஓவரில் 6, 2, 6, 6, 6, என்று 4 சிக்சர்களை விளாசினார் பொல்லார்ட். அதில் ஒரு சிக்சர் 101 மீட்டரும், இன்னொரு சிக்சர் 107 மீட்டரும், 3வது சிக்சர் 102 மீட்டர் தொலைவிலும் சென்று விழுந்தது. அந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 17.1 ஓவரில் மீண்டும் ஒரு சிக்சரை விளாசி பொல்லார்ட் ஆட்டத்தை முடித்தார்.
சிறப்பாக ஆடிய கேப்டன் பொல்லார்ட் 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற வைத்தார். மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் பொல்லார்ட்-க்கு 36 வயது மட்டுமே ஆகிறது. இருப்பினும் ஐபிஎல் தொடரில் ஓய்வை அறிவித்ததால், மும்பை அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். தற்போது பொல்லார்ட் அபாரமாக பேட்டிங் ஆடுவதால், அவர் மீண்டும் மும்பை அணிக்காக களமிறங்க வேண்டும் என்று பல்தான்ஸ் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.