இந்தூர்: புனே அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், புனே அணியை வீழ்த்தியது பஞ்சாப்.
10 வது ஐபிஎல் சீசன் தொடரின் 4வது லீக் போட்டி இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ரைசிங் புனே சூப்பர் ஜியான்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

டாசில் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து புனே அணிக்காக களமிறங்கிய துவக்க வீரர் அகர்வால் 'டக்' அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் ரகானே 19 ரன்களில் நடையை கட்டினார். இதனால் புனே அணி துவக்கத்திலே சோதனையை சந்தித்தது.
பின் வந்த கேப்டன் ஸ்மித் 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தனது 250வது டி-20 போட்டியில் களமிறங்கிய டோணி 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் தந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ஆல் ரவுண்டர் ஸ்டோக்ஸ், 32 பந்தில் அரைசதம் அடித்து 50 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் திவாரி அதிரடியாக ரன்கள் சேர்க்க புனே அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் அணி சார்பில் சந்தீப் சர்மா அதிகபட்சமாக 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். தமிழக வீரர் நடராஜன் 3 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 164 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு வோரா 14 ரன்களில் நடையைக் கட்டினார். சகா 13 ரன்களும், ஆம்லா 28 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த அக்ஷர் படேல் 24 சேர்த்து ஓரளவுக்கு கைகொடுத்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல், மில்லருடன் சேர்ந்து அதிரடியாக ரன்கள் சேர்த்தார். இதனால் பஞ்சாப் அணி 18.2 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கேப்டன் மேக்ஸ்வெல் 44 ரன்களும், மில்லர் 30 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் அணி முதல் போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.