கொல்கத்தா: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் ஷர்துல் தாகூர் 20 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் 9வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் முதல் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் குர்பாஸ் மட்டும் 57 ரன்கள் விளாசினார். இவரை தவிர்த்து ஆடிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதிரடி வீரர் ரஸ்ஸல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் வந்த ஷர்துல் தாகூர், தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய கொல்கத்தா அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். இதனிடையே பிரேஸ்வெல் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்து பந்துகளில் சிக்சர் விளாச, 20 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். ஐபிஎல் தொடரில் ஷர்துல் தாகூர் அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும்.