கொல்கத்தா: ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி பந்துவீச்சில் கேகேஆர் அணியின் வெங்கடேஷ் ஐயர் மற்றும் மன்தீப் சிங் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனைத் தொடர்ந்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே குரலில் ஆர்சிபி ஆர்சிபி என்று உற்சாக கோஷம் எழுப்பினர்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் 9வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடி வருகிறது. 4 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா மண்ணில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியுள்ள போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆர்சிபி அணி தரப்பில் கடந்த போட்டியில் காயமடைந்த டாப்லி அணியில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக மற்றொரு வெளிநாட்டு ஆல்ரவுண்டரான டேவிட் வில்லி சேர்க்கப்பட்டார்.தொடர்ந்து கொல்கத்தா அணி தரப்பில் தொடக்க வீரர்களாக குர்பாஸ் - வெங்கடேஷ் ஐயர் கூட்டணி களமிறங்கியது.
குர்பாஸ் ஒருபக்கம் அதிரடியாக ஆடிய நிலையில், வெங்கடேஷ் ஐயர் வழக்கம் போல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் விக்கெட்டுக்கு 26 ரன்கள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், டேவிட் வில்லி வீசிய 4வது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் போல்டாகி வெளியேறினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கு பின் வெங்கடேஷ் ஐயர் குறிப்பிடத்தக்க அளவில் எந்தவித ஆட்டத்தையும் ஐபிஎல் தொடரிலோ, உள்ளூர் கிரிக்கெட்டிலோ வெளிப்படுத்தவில்லை.
இருப்பினும் கொல்கத்தா அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் நீண்ட ஆண்டுகளாக விளையாடி வரும் மன்தீப் சிங், வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் போல்டாகி வெளியேறினார்.
இந்திய ஆடுகளங்களில் அதிகமாக பந்துவீசிய அனுபவம் இல்லாத டேவிட் வில்லி பந்துவீச்சில் முக்கியமான இளம் வீரர்கள் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈடன் கார்டன் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே குரலில், ஆர்சிபி, ஆர்சிபி என்று கோஷம் எழுப்பினர். இதனால் ஒரு நிமிடம் இந்த ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்தது.