கொல்கத்தா: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஷர்துல் தாகூரை வெறும் 5 பந்துகள் மட்டுமே வீசுவதற்காக பயன்படுத்திய கேகேஆர் நிர்வாகத்தையும், கேப்டன் ராணாவையும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி ஹாரி ப்ரூக் சதம் மற்றும் கேப்டம் மார்க்ரமின் அரைசதம் காரணமாக 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதனை கொல்கத்தா அணி சேஸ் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஐதராபாத் அணியின் பேட்டிங் போது ஷர்துல் தாகூரை பந்துவீச வைக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் ஹாரி ப்ரூக் மற்றும் மார்க்ரம் அதிரடியாக விளையாடிய போது, சுயாஷ் சர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அதிக ரன்கள விளாசினர். இதற்கு பதிலாக ஃபெர்குசன், உமேஷ் யாதவ் ஆகியோர் அட்டாக்கில் கொண்டு வந்த போதும் ஐதராபாத் அணியின் அதிரடியை சிறிதும் குறையவில்லை. இதனால் ஸ்கோர் வேகமாக உயர்ந்து வந்தது.
இதுபோன்ற சூழல்களில் சிறப்பாக செயல்படும் ஷர்துல் தாகூரை பந்துவீச கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா அழைக்கவே இல்லை. காயமடைந்த ரஸ்ஸல் ஓவரை முடிப்பதற்காக மட்டுமே ஷர்துல் தாகூரை கேகேஆர் அணி பயன்படுத்தியது. இதனால் ஷர்துல் தாகூர் பந்துவீச்சு இல்லாமல் வெறும் பேட்டிங் செய்வதற்காக மட்டும் தான் கேகேஆர் அணி ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணியிடம் இருந்து ஒப்பந்தம் செய்ததா என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அஸ்வின் சிறப்பாக பயன்படுத்திய டெல்லி அணி நிர்வாகம், குல்தீப் யாதவை பயன்படுத்தாமல் பெஞ்சில் அமர வைத்தது. இதனால் ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல், இந்திய அணியிலும் இருந்தும் குல்தீப் யாதவ் நீக்கப்படும் சுழல் ஏற்பட்டது. முக்கிய பந்துவீச்சாளராக ஷர்துல் தாகூர் இருக்கும் போதும், பெரிதாக ஃபார்மில் இல்லாத ஃபெர்குசன், உமேஷ் யாதவ் உள்ளிட்டோரை கேகேஆர் நிர்வாகம் பயன்படுத்துவது, ஷர்துல் தாகூருக்கு மனதளவில் கூடுதல் பாதிப்படைய வைக்கும் சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.