ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, பிளே ஆப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இன்னும் இரண்டு லீக் சுற்று ஆட்டங்கள் மட்டுமே உள்ளன.
ஏற்கனவே, சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
ஹைதராபாத்தில் இன்று நடந்த 54வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. ஷிகார் தவான் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். கேன் வில்லியம்சன் 36 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் 661 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தோரில் முதலிடத்தைப் பிடித்து ஆரஞ்ச் கேப் பெற்றார்.
ஒரு கட்டத்தில் மிகவும் வலுவான நிலையில் இருந்த ஹைதராபாத் கடைசியில் விக்கெட்களை இழந்தது. கடைசி ஓவரில் மட்டும் 4 விக்கெட்களை இழந்தது. கொல்கத்தாவின் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய கொல்கத்தா, 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
கிறிஸ் லைன் 55, சுனில் நரேன் 29, ராபின் உத்தப்பா 45 ரன்கள் எடுத்தனர். கேப்டனான தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடி ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் எடுத்து அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகளைப் பெற்று கொல்கத்தா பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
பிளே ஆப் சுற்றுக்கு நுழையப் போகும் கடைசி அணி எது என்பது நாளை நடக்கும் டெல்லி மற்றும் மும்பை, சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஆட்டங்களின் முடிவுகளில்தான் தெரியும்.
தற்போதைய நிலையில், ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி உள்ளது.