கொல்கத்தா: கொல்கத்தா மைதானத்தில் முதல்முறையாக ரிங்கு சிங் பேட்டிங் செய்யும் போது ரசிகர்கள், ரிங்கு.. ரிங்கு..என்று கோஷம் எழுப்பியது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்ததாக கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணியை கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. ரஸ்ஸல் மற்றும் ரிங்கு சிங்கின் அபார ஆட்டத்தால் கொல்கத்தா அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலிலும் பெங்களூரு, மும்பை அணியை பின்னுக்கு தள்ளி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல் வாழ்வா, சாவா போட்டிகளில் ஆடி வரும் கொல்கத்தா அணி, அடுத்தடுத்து வெற்றிகளை பெறுவதால் எதிரணிகளுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது குறித்து கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணா கூறுகையில், நான் பேட்டிங் செய்யும் போது ஒருமுனையில் நின்று ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வெங்கடேஷ் ஐயரின் கால்களில் காயம் ஏற்பட்டது. இதனால் மிடில் ஓவர்களில் ஒரேயொரு ஓவரில் டார்கெட் செய்ய முடிவு செய்தோம். இதுவரை 10 போட்டிகளில் ஆடிவிட்டோம். ஆனால் அனைவருமே ரஸ்ஸலிடம் இருந்து ஒரேயொரு சிறந்த இன்னிங்ஸ்-க்காகவே காத்திருந்தோம். ஏனென்றால் ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆடினால், அடுத்து என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதனால் தான் ஒவ்வொரு போட்டியில் ரஸ்ஸலை களமிறக்கினோம். எங்களை வெற்றிபெற வைக்க போகிறவர் நீங்கள் தான் என்று ரஸ்ஸலுக்கு நம்பிக்கை அளித்து வந்தோம். இன்றையப் போட்டியில் நிகழ்ந்தது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் பந்துவீச்சாளர்கள் டெத் ஓவர்களில் சொதப்பிவிட்டார்கள். இந்த பிட்ச்சில் 165 ரன்களுக்கு மேல் சேர்ப்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் தான் கோபமடைந்தேன். அதேபோல் ரிங்கு சிங்கிடம், ஒவ்வொரு முறையும் நம்பிக்கையாக இருக்குமாறு கூறினோம். அவர் சாதித்தவற்றை இனி எத்தனை வீரர்களால் சாதிக்க முடியும் என்று தெரியவில்லை.
ரிங்கு சிங் பேட்டிங் செய்யும் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ரிங்கு.. ரிங்கு என்று கரகோஷம் எழுப்பினார்கள். அந்த நம்பிக்கையை தான் ரிங்கு சிங் நடப்பு ஐபிஎல் தொடரில் சம்பாதித்துள்ளார் என்று நினைக்கிறேன். கொல்கத்தா அணிக்காக பல ஆண்டுகளாக ஆடி வருகிறேன். ஈடன் கார்டன்ஸ் ரசிகர்கள் வழக்கமாக ரஸ்ஸல்.. ரஸ்ஸல் என்று கரகோஷம் எழுப்பி பார்த்திருக்கிறேன். ஆனால் ரிங்கு என்று கோஷம் எழுப்புவது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.