கொல்கத்தா: கேகேஆர் அணியின் ஃபினிஷர் ரிங்கு சிங்கிற்கு, சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கூறிய அறிவுரை குறித்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தா அணி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இனிவரும் அனைத்து போட்டிகளில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றால் மட்டுமே, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் நெட் ரன் ரேட்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளிடையே முக்கிய பங்காற்றும்.

கொல்கத்தா அணியின் வெற்றி ரிங்கு சிங்கின் ஆட்டத்தை பொறுத்தே அமைந்து வருகிறது. தணியாளாக இரு போட்டிகளை கேகேஆர் அணிக்காக வென்று கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஃபினிஷர் ரோலில் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் 337 ரன்களை 151.12 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசியுள்ளார்.
இதனிடையே கொல்கத்தா - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த பின்னர் ரிங்கு சிங் நீண்ட நேரமாக சென்னை அணியின் கேப்டனும், ஃபினிஷருமான எம்எஸ் தோனியுடன் நீண்ட நேரம் பேசினார். இந்த நிலையில் தோனியுடன் பேசிய கருத்துகளை ரிங்கு சிங் கூறியுள்ளார். அதில், உலகின் மிகச்சிறந்த ஃபினிஷர் எம்எஸ் தோனி தான். அவரிடம் நான் பேட்டிங் செய்யும் போது எப்படி செயல்பட வேண்டும் என்று கேள்வி கேட்டேன்.

அதற்கு தோனி, உன்னுடைய திட்டத்தை எளிமையாக வைத்துக் கொள். பந்து எப்படி வீசப்படுகிறதோ, அதற்கேற்ப செயல்படு என்று தெரிவித்தார். இந்த அறிவுரை மற்றவர்கள் சொல்வதில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். அதேபோல் ரிங்கு சிங்கும் எப்போதும் ஃபேன்சி ஷாட்களை அடிக்காமல் அதிகமாக மிட் ஆன், மிட் ஆஃப் திசையில் தான் சிக்சர்களை விளாசி வருவது குறிப்பிடத்தக்கது.