மொகாலி: ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மூன்றாவது வெற்றி பெற்றது.
மொகாலியில் நேற்று நடந்த லீக் போட்டியில் கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற காம்பீர் முதலில் பந்து வீச முடிவு செய்தார். கடந்த போட்டியில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த மன்னன் வோரா 8 ரன்களில் மோர்கல் பந்தில் ஆட்டமிழந்தார். முரளி விஜய் நிதானமாக ஆடி 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் மில்லர் (6), மேக்ஸ்வெல் (4), சஹா (8) ஆகியோர் ரன் குவிக்க தவறினர். ஷான் மார்ஷ் மட்டும் நிலைத்து நின்று ஆடி ரன் குவித்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்களை இழந்து 138 ரன்கள் எடுத்தது. ஷான் மார்ஷ் 56 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா தரப்பில் மோர்கல், நரேன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா. அந்த அணிக்கு உத்தப்பா, காம்பீர் ஜோடி நல்ல துவக்கம் தந்தனர். அடித்து ஆடிய உத்தப்பா 53 ரன்னிலும், காம்பீர் 34 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன் பிறகு மணிஷ் பாண்டே(12), சாகிப் அல் ஹசன் (11) ரன்னில் அவுட் ஆகினர். கடைசியில் யூசுப் பதான் இரண்டு பவுண்டரி அடிக்க கொல்கத்தா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யூசுப் பதான் (12), சூர்யகுமார் (11), ரன்னில் இறுதி வரை அவுட்ஆகாமல் இருந்தனர்.
ஏற்கனவே கொல்கத்தா அணி 3 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது..இது கொல்கத்தாவுக்கு மூன்றாவது வெற்றி ஆகும்.