கொல்கத்தா: ஐபிஎல் வரலாற்றில் அரைசதம் விளாசிய முதல் ஆஃப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை குர்பாஸ் படைத்துள்ளார். ஒருபக்கம் கொல்கத்தா அணியில் விக்கெட்டுகள் சரிந்தாலும் சிறப்பாக ஆடிய இவர், 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஐபிஎல் தொடரில் களமிறங்கிய 2வது போட்டியிலேயே குர்பாஸ் அரைசதம் விளாசியது அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் 9வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதேபோல் கடந்த போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகிய டாப்லிக்கு பதிலாக, ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி அணியில் சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து கொல்கத்தா அணி சார்பாக குர்பாஸ் - வெங்கடேஷ் ஐயர் கூட்டணி களமிறங்கியது. சிராஜ் பந்தை குர்பாஸ் வெளுத்து வாங்க, மறுபக்கம் வெங்கடேஷ் ஐயர் நிதானமாக ஆடினார். இதனைத் தொடர்ந்து அட்டாக்கில் வந்த டேவிட் வில்லி, வெங்கடேஷ் ஐயரை 7 ரன்களிலும், மன்தீப் சிங்கை டல் அவுட்டிலும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து அணியை மீட்க வந்த நிதிஷ் ராணாவும், பிரேஸ்வெல் பந்தில் 1 ரன்னில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி சிக்கலில் சிக்கி கொண்டது.
இதனிடையே மறுபக்கம் அவசரமில்லாமல் ஒவ்வொரு பந்துகளையும் தேர்வு செய்து குர்பாஸ் அவ்வப்போது பவுண்டர்களை விளாசினார். ஒரு கட்டத்தில் அதிரடியாக கியரை மாற்ற, ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை 38 பந்துகளில் அடித்து அசத்தினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், இன்னொரு பக்கம் அணியை காப்பாற்ற தானாக முன்வந்து பொறுப்பேற்றுக் கொண்ட குர்பாஸ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியாக 44 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அரைசதம் விளாசிய முதல் ஆஃப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்
ஆஃப்கானிஸ்தான் அணியில் இருந்து ரஷீத் கான், நபி, முஜூபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் பந்துவீச்சாளர்களாகவே ஐபிஎல் தொடரில் ஆடி வந்துள்ளனர். முதல்முறையாக குர்பாஸ் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக குஜராத் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த சீசனில் குர்பாஸ்-க்கு களமிறங்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு குஜராத் அணியிடம் இருந்து டிரான்ஸ்ஃபர் முறையில் கொல்கத்தா அணி வாங்கியது. அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் குர்பாஸ் தனது இரண்டாவது ஐபிஎல் போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.