கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சாளர் சுனில் நரீன், ஐபிஎல் போட்டிகளில் ஆப் ஸ்பின் பந்து வீச்சை மேற்கொள்ள பிசிசிஐ தடை விதித்துள்ளது.
இருப்பினும் நக்கிள் மற்றும் ஸ்டிரெய்ட் பந்து வீச்சை (the knuckle ball and the quicker straight ball) அவர் தொடரலாம். அவரது ஆப் ஸ்பின் பந்து வீச்சானது விதிமுறைக்குப் புறம்பாக இருப்பதால் அந்தப் பந்து வீச்சைத் தொடர நரீனுக்குத் தடை விதிக்கப்படுவதாக கூறியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இதை அவர் மீறினால் அது நோ பால் ஆக அறிவிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிசிசிஐ எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐபிஎல்லின் சந்தேகத்துக்குரிய, சட்டவிரோத பந்து வீச்சு கொள்கை வகுப்பின்படி, ஐபிஎல் கமிட்டியானது கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளது.
சுனில் நரீனின் ஆப் ஸ்பின் பந்து வீச்சானது, பிசிசிஐ கிரிக்கெட் சட்டத்தின் 24.2 பிரிவின் கீழ் முரண்பட்டதாக உள்ளது. எனவே அவர் ஆப் ஸ்பின் முறையில் பந்து வீச தடை விதிக்கப்படுகிறது.
ஐபில் உள்பட பிசிசிஐ நடத்தும் அனைத்து வகையான போட்டிகளிலும் அவர் ஆப் ஸ்பின் வீச தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும் நக்கிள் மற்றும் குவிக்கர் ஸ்டிரெய்ட் பந்து வீச்சை அவர் தொடரலாம்.
நரீன் மீண்டும் ஆப் ஸ்பின்னை தொடர்ந்தால், அவரது பந்தை நோ பால் ஆக நடுவர்கள் அறிவிப்பார்கள். மேலும் அவர் குறித்த அறிக்கையையும் நடுவர்கள் தர அறிவுத்தப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட பந்து வீச்சை அவர் தொடர்ந்தால் தானாகவே அவர் போட்டித் தொடரிலிருந்து சஸ்பெண்ட் ஆகி விடுவார் என்று அவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 22ம் தேதி சுனில் நரீன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கலந்து கொண்டு பந்து வீசியிருந்தார். அப்போட்டியில் அவரது பந்து வீச்சு சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக நடுவர்கள் அறிக்கை அளித்தனர். இதைத் தொடர்ந்து சுனில் நரீன், சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா ஆர்த்திரோஸ்கோப்பி மற்றும் விளையாட்டு அறிவியல் மையத்திற்கு அனுப்பப்பட்டு பயோமெக்கானிக்கல் ஆய்வு முறையில் அவரது பந்து வீச்சு ஆராயப்பட்டது.
இங்கு தரப்பட்ட ஆய்வறிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட போட்டியில் அவர் பந்து வீசியது ஆகியவற்றை ஆராய்ந்த பின்னர் தற்போது ஆப் ஸ்பின் மட்டும் வீச சுனில் நரீனுக்கு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டே நரீன் பந்து வீச்சில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சாம்பியன்ஸ் லீக் டுவென்டி 20 போட்டியில் பந்து வீச தடை விதிக்கப்பட்டார். இதையடுத்து உலகக் கோப்பைத் தொடரில் சுனில் நரீன் பங்கேற்கவில்லை. விலகிக் கொண்டார். ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்க ஆரம்பத்தில் பிசிசிஐ ஆட்சேபித்து வந்தது. பின்னர் சென்னையில் பந்து வீசி தன்னை நிரூபித்த பின்னர் நரீன் கலந்து கொள்ள அனுமதி கிடைத்தது. ஆனால் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நரீன். நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சுனில் நரீன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.