மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் 20 ஓவர்கள் வரை தாக்கு பிடிக்க முடியாத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்ததாக பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த படுதோல்விக்கு பிறகு பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஒட்டுமொத்தமாக பேட்டிங்கிற்கு கிடைத்த தோல்வி என சாடினார்.

"இது ஒட்டுமொத்தமாக பேட்டிங்கின் தோல்வி. இது பேட்டிங் செய்வதற்கு நல்ல விக்கெட் என்பதை நான் டாஸ் போடும்போதே சொன்னேன். இங்கு 180 முதல் 190 ரன்கள் வரை அடித்தால் நன்றாக இருந்திருக்கும். இங்கு நல்ல பவுன்ஸ் இருந்தது. சில சமயம் நாம் வேகத்தையும், பவுன்ஸையும் நமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும்."
"இந்த போட்டியில் நாங்கள் விரைவாக கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் எங்களால் பந்தை வைத்து அதிகம் ஒன்றும் செய்ய முடியவில்லை. பந்துவீச்சாளர்கள் அவர்களின் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த முயன்றார்கள். ஆனால், நாங்கள் அதிக ரன்கள் எடுக்காததால் பந்துவீச்சாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை."
"நாங்கள் பேட்டிங்கில் தொடர்ந்து விக்கெட் இழந்து கொண்டே இருந்தோம். பவர் பிளேயிலேயே நான்கு விக்கெட் இழந்து விட்டோம். அதையும் மீறி இந்த ஸ்கோரை நாங்கள் எடுத்து வருவதற்கு மிகவும் கடினமானதாக மாறிவிட்டது. ஒரு நீண்ட கூட்டணி இருந்து இருக்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நின்று ஆடி இருக்க வேண்டும். இது எதுவும் நடக்கவில்லை" என அஜிங்க்யா ரஹானே தோல்விக்கான காரணத்தை விளக்கினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான் ஆடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியும் மூன்றில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருந்தாலும் அதிக நெட் ரன் ரேட் உடன் ஆறாவது இடத்தில் உள்ளது.