KKR vs MI: மைதானத்திலேயே தலையில் அடித்துக்கொண்ட ஹர்திக் பாண்டியா.. சாஹர் - மின்ஸ் செய்த சொதப்பல்
கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், மும்பை வீரர்களின் 'சிரிப்பை வரவழைக்கும்' பீல்டிங் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை நிலைகுலையச் செய்தது. ஒரு எளிய கேட்சை எடுக்க இரு வீரர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றதால், பந்து தரையில் விழுந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.
பாகிஸ்தான் அணி தான் இதுபோன்ற மோசமான ஃபீல்டிங் சொதப்பல்களை செய்யும். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு மோசமான சொதப்பலை செய்தனர் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பாகிஸ்தான் அணியாக மாறி விட்டது என மீம்ஸ் போடும் அளவுக்கு நிலைமை சென்றது.

ஏற்கனவே பிளே-ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, இந்த 2026 சீசன் ஒரு மோசமான கனவாகவே முடிந்துள்ளது. அந்தத் தொடர் தோல்விகளின் உச்சகட்டமாக இந்த பீல்டிங் தவறு அமைந்தது.
என்ன நடந்தது?
கொல்கத்தா அணி இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த போது, ஆட்டத்தின் 10-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரில் ரோவ்மேன் பவல் அடித்த பந்து பேட்டின் விளிம்பில் பட்டு வானத்தை நோக்கி உயரே சென்றது. அது ஒரு மிக எளிய கேட்ச் வாய்ப்பு. அந்தப் பந்தை பிடிக்க ராபின் மின்ஸ் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இரு வீரர்களும் ஓடி வந்தனர். பந்து கீழே இறங்கியபோது, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர்.
தீபக் சாஹர் பிடிப்பார் என எண்ணி ராபின் மின்ஸ் கடைசி நேரத்தில் ஒதுங்கினார். ஆனால், மின்ஸ் பிடிப்பார் என நினைத்த சாஹர் தனது கவனத்தை இழந்தார். இறுதியில் பந்து யாரிடமும் சிக்காமல் இருவருக்கும் நடுவே தரையில் விழுந்தது. பவல் ஆட்டமிழக்க வேண்டிய இடத்தில் ஒரு புதிய வாழ்வைப் பெற்றார்.
அதிர்ச்சியில் ஹர்திக் பாண்டியா
தன்னுடைய பந்துவீச்சில் விக்கெட் கிடைக்க வேண்டிய வாய்ப்பை வீரர்கள் இப்படிச் சொதப்பியதைக் கண்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா, மைதானத்திலேயே திகைத்துப் தலையில் அடித்துக் கொண்டார். அவரது முகத்தில் தெரிந்த ஏமாற்றமும் கோபமும் மும்பை அணியின் தற்போதைய நிலையை அப்பட்டமாகப் பிரதிபலித்தது.
மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவர்பிளே ஓவர்களிலேயே 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. ஹர்திக் பாண்டியா 26 ரன்களும், திலக் வர்மா 20 ரன்களும் எடுத்தனர்.
கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய கார்பின் போஷ் 18 பந்துகளில் 32 ரன்கள் எடுத்ததால் மும்பை அணி 147 ரன்கள் எடுத்து ஓரளவு கௌரவமான ஸ்கோரை எட்டியது. கொல்கத்தா தரப்பில் சௌரவ் துபே, கேமரூன் கிரீன் மற்றும் கார்த்திக் தியாகி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினர். அடுத்து ஆடிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications
