கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவனில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்படாதது ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்படாததற்கான காரணம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.
18வது ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து கேகேஆர் அணி தரப்பில் சுனில் நரைன் - டி காக் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் டி காக் 4 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ரஹானே களமிறங்கினார்.

அதேபோல் ஆர்சிபி அணி தரப்பில் ஹேசல்வுட் மற்றும் யாஷ் தயாள் கூட்டணி பவுலிங்கை தொடங்கியது. இந்த நிலையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான புவனேஷ்வர் குமார் களமிறங்காதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் இளம் பவுலரான ரஷீக் தார் பவுலிங்கில் ரஹானே அடுத்தடுத்து 2 சிக்ஸ், பவுண்டரியை விளாசி அட்டாக்கை தொடங்கினார்.
இதனால் புவனேஷ்வர் குமார் களமிறங்காதது ஏன் என்று ரசிகர்கள் விவாதிக்க தொடங்கினர். அப்போது கேமராவும் ஆர்சிபி ஓய்வறை பக்கம் திரும்ப, ஆர்சிபி அணியின் ஜெர்சியை அணிந்து புவனேஷ்வர் குமார் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார். இந்த நிலையில் புவனேஷ்வர் குமார் ஆர்சிபி பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது ஏன் என்று தகவல் கிடைத்துள்ளது.
பயிற்சியின் போது ஏற்பட்ட சிறிய காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆர்சிபி அணி நிர்வாகம் தரப்பில், சிறிய காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் களமிறங்கவில்லை. விரைவில் களத்தில் பவுலிங் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் ஹேசல்வுட் காயம் காரணமாக களமிறங்குவாரா என்று சந்தேகம் கொண்டனர். ஆனால் அவுட் ஆஃப் சிலபஸாக புவனேஷ்வர் குமார் களமிறங்கவில்லை. ஆர்சிபி அணியால் ரூ.10.75 கோடிக்கு மற்ற அணிகளுடன் போட்டி போட்டு வாங்கப்பட்டார். இதனால் ஆர்சிபி ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.