கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலாகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் மற்றும் ஆதியா ஷெட்டி ஆகியோரின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. திருமண புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
இந்தியாவில் கிரிக்கெட் பிரபலங்களும், திரைத்துறையை சேர்ந்த நட்சத்திரங்களும் காதல்வயப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக பாலிவுட்டில் தான் இது அதிகம்.
ஏற்கனவே முன்னணி வீரர்களான ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பல வீரர்களும், சினிமா நடிகைகளையே திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

ராகுல் - ஆதியா காதல்
இந்திய அணியின் ஓப்பனிங் வீரரான கே.எல்.ராகுல் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை ஆதியா ஷெட்டி ஆகியோர் கடந்த 2019ம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். ஆதியா ஷெட்டி பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார். சுனில் ஷெட்டி தமிழில் வெளியான தர்பார் படத்தில் கூட வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தார்.

திருமணம் முடிந்தது
இந்நிலையில் ஆதியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. நடிகர் சுனில் ஷெட்டிக்கு மும்பைக்கு அருகே காண்டாலா மேன்ஷன் என்ற பிரமாண்ட பங்களா உள்ளது. இந்த இல்லத்தில்தான் கே.எல்.ராகுலின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. மிகவும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

யார்? யார்? பங்கேற்றனர்
விளையாட்டு துறையில் இருந்து வருண் ஆரோன், இஷான் சர்மா ஆகிய இருவரும் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். பங்களாவிற்குள் திருமணம் நடந்து முடிந்தவுடன் உடனடியாக வெளியே வந்த சுனில் ஷெட்டி, பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இனிப்புகளை வழங்கி நற்செய்தியை கூறினார்.

வரவேற்பு நிகழ்ச்சி
இவர்களின் திருமணத்தில் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பங்கேற்ற சூழலில் வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் பிரமாண்ட முறையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications