ரோஹித் - கோலி மோதல்
இந்திய அணியில் கடந்த சில நாட்களாக ரோஹித் சர்மா - கோலி இடையே விரிசல் இருப்பதாக கூறப்பட்டது. பிசிசிஐ இதை விசாரிக்காமல் மழுப்பி வந்தது. கோலி - ரோஹித் இருவரும் இது பற்றி வாய் திறக்கவில்லை.
அன்பாலோ செய்த ரோஹித்
எனினும், மோதல் இருப்பதை சூசகமாக தெரிவித்தார் ரோஹித் சர்மா. கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை இன்ஸ்டாகிராமில் அன்பாலோ செய்தார். அந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. அனுஷ்கா சர்மா மர்மமான ஒரு விடுகதை போட்டு, பிரச்சனை இருப்பதை பூடகமாக கூறினார்.
பாலோ செய்த இருவர்
இந்த நிலையில், இந்திய வீரர்கள் ராகுல் மற்றும் சாஹல், அதே அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரோஹித் அன்பாலோ செய்த பின் புதிதாக பாலோ செய்து வருகின்றனர். இது தொடர்பான செய்திகளும் வேகமாக பரவி வருகிறது.
விசுவாசம் காட்டுகிறார்களா?
ரோஹித் சர்மாவை பழி வாங்குவதாக நினைத்து "சின்னப் புள்ளத்தனமாக" அவர்கள் இருவரும் இப்படி செய்ததாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதன் மூலம், ராகுல், சாஹல் இருவரும் விராட் கோலி கோஷ்டி என்பதை உறுதிப்படுத்தியதோடு, ரோஹித்தை பழி வாங்கி தங்கள் விசுவாசத்தை காட்டி உள்ளனர்.
கோஷ்டி இருப்பது உறுதி
ராகுல் கடந்த ஆண்டுகளில் மோசமாக ஆடினாலும், அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வந்தது. அதே போல, சாஹல், கோலி கேப்டனாக இருக்கும் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சேர்ந்தவர். அதோடு தற்போது, ரோஹித் செயலுக்கு எதிராக இவர்கள் செய்துள்ள காரியத்தால் இவர்கள் கோலி கோஷ்டியை சேர்ந்தவர்கள் தான் என தெரிய வந்துள்ளது என்றும் கூறுகிறார்கள் ரசிகர்கள்.
நடவடிக்கை தேவை
அரசியலை விட கேவலமாக சென்று கொண்டு இருக்கும் இந்த கோஷ்டி மோதலை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ரோஹித் - கோலி மோதலில் பிசிசிஐ அமைதி காப்பது நல்லதல்ல!