4வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் 4வது போட்டியில் இன்றைய தினம் மும்பையின் வான்கடே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்களை இலக்காக கொடுத்துள்ளது.
50 பந்துகள்... 91 ரன்கள்
இந்த போட்டியில் துவக்க வீரராக களமறங்கி ஆடிய பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் இறுதி வரை விளையாடி 50 பந்துகளில் 91 ரன்களை குவித்தார். அவர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சேத்தன் சகரியா பந்துவீச்சில் அவர் அதை மிஸ் செய்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸ்களும் அடக்கம்.
அதிரடி ரன் குவிப்பு
ராகுல் மற்றும் ஹூடா இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். ஹூடா 28 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். இருவரும் இணைந்து அதிரடி பார்ட்னர்ஷிப்பில் அணியின் ஸ்கோர் 221ஆக உயர பங்களிப்பை அளித்தனர்.
|
2000 ரன்களை பூர்த்தி செய்த ராகுல்
மேலும் இந்த போட்டியின்மூலம் அவர் மேலும் ஒரு சாதனையை புரிந்துள்ளார். அவர் ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி 2000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் தான் பஞ்சாப் கிங்ஸ் அணியின் எவர்கிரீன் ரன் மெஷின் என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.
111 ரன்கள் குவிப்பு
அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ரன்களை குவிக்க இறுதி 8 ஓவர்களில் 111 ரன்களை பஞ்சாப் அணி குவித்தது. கடந்த சீசனில் சிறப்பாக விளையாடி ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றிய கேஎல் ராகுல் இந்த சீசனில் பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டனாகவும் சிறப்பான செயல்பாட்டை காண்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது.