
இந்திய அணி சொதப்பல்
கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறிய இந்திய அணி, சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரிலும் சூப்பர் 4 சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது. எனவே டி20 உலகக்கோப்பைக்காவது நன்றாக தயாராகுமா என்ற குழப்பம் உள்ளது. அதுகுறித்து தான் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.

ராகுல் விளக்கம்
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திறமைப்படி பார்த்தால் நாங்கள் 80 -85% தான் வெளிகாட்டியிருக்கிறோம். பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் இன்னும் சரியாக செயல்படவில்லை. அதில் சில விஷயங்கள் மாற்றப்பட வேண்டியுள்ளது. இதை எல்லாமே சரி செய்தால் தான் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும். அப்படி பார்த்தால் ஒவ்வொரு தொடரிலும் சரிசெய்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

வெவ்வேறு தவறு
கடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி செய்த தவறும், ஆசிய கோப்பையில் செய்த தவறும் வெவ்வேறு தான். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அந்த தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டுள்ளோம். நிச்சயம் டி20 உலகக்கோப்பையில் அதை சரி செய்து விடுவோம்.

முக்கிய விஷயம்
ஓய்வறையில் ஒரு வீரருக்கு மிக முக்கியமான விஷயம் கேப்டன், கோச் உள்ளிட்டோர் நம்மை குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பது தான். அந்தவகையில் பார்த்தால் இந்திய அணியில் அனைத்து வீரர்களுக்கும் தவறு செய்யும் உரிமை உண்டு. தவறு செய்தால் இடம் போய்விடுமோ என்ற அச்சம் எங்களிடம் இல்லை. மாறாக தவறு செய்தால் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும் என கே.எல்.ராகுல் கூறினார்.


Click it and Unblock the Notifications











