லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்திய வீரர்கள் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் அபாரமான ஜோடி ஆட்டத்தை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். அதே சமயம் சில வாய்ப்புகளை இந்திய அணி கோட்டை விட்டு விட்டதாக சுட்டிக் காட்டி உள்ளார்.
இந்திய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 141 ரன்கள் சேர்த்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தது. ராகுல் நிதானமாக சதம் அடித்தும், ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 74 ரன்கள் எடுத்தும் அசத்தினர்.

அவர்களின் ஆட்டம் குறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒருவர் ஆட்டத்தை சீராக நகர்த்த, மற்றொருவர் வேகப்படுத்தினார். கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட்டின் ஜோடி ஆட்டம் பொறுமை மற்றும் போட்டி நோக்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. ஜடேஜா அவர்களை தொடர்ந்து கட்டுகோப்பான அரைசதம் அடித்தார். சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்திய நாள். சில வாய்ப்புகள் பறிபோனது. ஆனால், போட்டி இன்னும் நடப்பதால் இனியும் வாய்ப்புகள் கிடைக்கும்." என்று குறிப்பிட்டார்.
ராகுல் சதம் அடிக்க வேண்டி ரிஷப் பண்ட் விரைவாக சிங்கிள் எடுக்க ஓடி ரன் அவுட் ஆனார். அதே போல, சதம் அடித்த உடன் உணர்ச்சிமிகுதியில் இருந்த ராகுல் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதை தான் நழுவ விட்ட வாய்ப்பு என சச்சின் சூசகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார்.
கே எல் ராகுல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பேட்டிங், இந்திய அணி இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 387-ஐ சமன் செய்ய உதவியது. கே.எல். ராகுல் இந்தப் போட்டியில் அடித்த சதம், லார்ட்ஸ் மைதானத்தில் அவரது இரண்டாவது சதமாகும். இதன் மூலம், திலீப் வெங்சர்க்காருக்குப் பிறகு லார்ட்ஸில் இரண்டு சதங்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
ரிஷப் பண்ட் 112 பந்துகளில் 74 ரன்கள் எடுத்திருந்தபோது, ரன் அவுட் ஆனார். இருப்பினும், இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டம், போட்டியின் முக்கியமான தருணத்தில் இந்தியாவை சரிவிலிருந்து மீட்டது. இந்த முக்கிய பார்ட்னர்ஷிப்பால், டெஸ்ட் போட்டி தற்போது சமநிலையில் உள்ளது.
இனி இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன் குவிக்க விடாமல் பார்த்துக் கொள்வதே இந்திய அணியின் நோக்கமாக இருக்க வேண்டும்.